அத்தியாவசிய தேவையின்றி... வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய போது பிரதமர் மோடி இதனைக் கூறினார்.
மேலும், எத்தகைய சவால்களையும் சந்திக்க முடியும் என்ற துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு பணிகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.
தற்போது அமலில் உள்ள கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்றினாலே முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தார். வீட்டில் உள்ள இளைஞர்களும், குழந்தைகளும் அவர்களது குடும்பத்தினரை அவசியத் தேவைகளின்றி வெளியில் செல்வதை தடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும், அறிவுரையும் அளிக்கும் வகையில் பிரதமர் மோடியின் உரை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தயாரிப்பு குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார் என்றவுடன் முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பு வரப்போவதாக தகவல் பரவிய நிலையில் அவரது உரை கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக மட்டுமே இருந்தது.