தீயாக பரவும் கொரோனா.. விரைவில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை.. பிரதமர் மோடி பேச்சு.. ஏன் முக்கியம்
டெல்லி: இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா கேஸ்கள் திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, கொரோனா பரவல் நிலை காரணமாக வரும் ஜன.15 வரை நேரடி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் காலத்தில் இருக்கும் நிலையை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 2 நாட்களாகவே தினசரி கேஸ்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று மட்டும் நாட்டில் 1.59 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாசிட்டிவ் விகதம், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் பல மாதங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் உயர்ந்துள்ளன. நாட்டின் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை வரும் காலத்தில் மேலும் உயரும் என்றே அஞ்சப்படுகிறது.

பிரதமர் பேச்சு
இந்நிலையில், கொரோனா பரவல் நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா பரவல் குறித்தும், அதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் டெஸ்டிங், மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை, தடுப்பூசிகள் மற்றும் மருந்து ஆகியவற்றில் தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சி தேவை.

முதல்வர்களுடன் ஆலோசனை
15 முதல் 18 வயதினருக்கு வேக்சின் போடும் பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வரும் நாட்களில் கொரோனா வழிகாட்டுதல்களை நாம் எப்படி பின்பற்றுகிறோம் என்பதே முக்கியமானதாக இருக்கும். கொரோனா பரவல் நிலை குறித்து விரைவில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அனைத்து மாநில அரசுகளும் மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று பிரதமர் மோடி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நிதி
மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். நாளை (ஜன. 10) முதல் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் நிலையிலும் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் பிரமரின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும். இதில் ரயில்வே வாரிய தலைவர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலர் ஆகிவரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications