இன்று இந்தோனேசியா செல்கிறார் மோடி.. ஜி 20 மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் சர்வதேச கவுரவம்
டெல்லி: 17 வது ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு செல்கிறார். இந்த மாநாட்டின் முடிவில் ஜி 20 தலைமை பதவியை ஏற்கிறது இந்தியா.
17 வது ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 14) தொடங்கி நவம்பர் 16 ஆம் தேதி வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற இருக்கிறது.
ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற மையக் கருத்தின் அடிப்படையில் இந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளில் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.

ஜி 20 மாநாடு
சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் என 3 தலைப்புகளின் கீழ் இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகள் நடைபெற்று தலைவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜி 20 நாடுகள் குழுவில் இடம்பெற்று உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு புறப்படுகிறார்.

இந்தோனேசியா பயணம்
இந்தோனேசிய அதிபர் ஜோகா விடடோவின் அழைப்பை ஏற்று இன்று டெல்லியில் இருந்து அந்நாட்டின் தலைநகர் பாலி நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்படுகிறார். ஜி 20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதுடன் அங்கு வரும் சில நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.

இந்தியாவுக்கு கவுரவம்
இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரும் கவுரவம் கிடைக்க இருக்கிறது. அதுதான் ஜி 20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி. ஜி 20 நாடுகளின் மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடியிடம் மரபுப்படி ஜி 20 நாடுகளின் தலைவர் பொறுப்பை வழங்குகிறார்.

இந்தியாவில் ஜி 20
இதனை அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட படத்தில் ஜி20 லோகோவில் தாமரை சேர்க்கப்பட்டு உள்ளது. இந்தோனேசிய தலைநகர் பாலியில் வசிக்கும் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications