"இலவச ரேஷன்!" மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.. பொதுமக்கள் ஹேப்பி!
டெல்லி: நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட சமயத்தில் கடந்த 2020 மார்ச் மாதம், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பின்னர் பல்வேறு காரணங்களால் நீட்டிக்கப்பட்டது.
அந்தச் சூழலில் மக்களின் இயல்வு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போது வாழ்வாதாரம் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் அறிவிக்கப்பட்ட இந்த பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் சுமார் 80 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குகிறது. கூடுதல் தானியங்களையும் மிகக் குறைந்த விலையில் மத்திய அரசு வழங்குகிறது.

கரிப் கல்யாண் அன்ன யோஜனா
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் உள்ள பல கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் முதலில் 3 மாதங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. பின்னர் அத்திட்டம் பல முறை நீட்டிக்கப்பட்டு, இந்த மாதம் (மார்ச்) வரை உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் வரும் செப். மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

செப். வரை நீட்டிப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி PMGKAY திட்டம் இந்த ஆண்டு செப்டம்பர் வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த போதிலும், மத்திய அரசு இத்தட்டத்தை நீட்டித்துள்ளதாகவும் இது மோடி அரசுக்கு ஏழைகள் மீதான அக்கறையைக் காட்டுவதாகவும் உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 'ட்வீட் செய்துள்ளார்.

1,003 லட்சம் டன்
இத்திட்டத்தின் கீழ் இதுவரை ₹ 3.4 லட்சம் கோடி செலவில் 1,003 லட்சம் டன் உணவு தானியங்களை விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் இதுவரை 5 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது 6ஆவது முறையாக இத்திட்டம் வரும் செப். மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications