"மெகா ஒப்பந்தம்!" ஆஸ்திரேலியா உடன் நெருங்கும் இந்தியா.. சீனாவுக்கு செக் வைக்க மாஸ்டர் பிளான்
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து தாதுகள், மணல்கள் உள்ளிட்டவற்றை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகச் சீனா இருந்து வந்தது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு கடந்த சில ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது.
என் உயிருக்கு ஆபத்து.. ”ஸ்தாபனம்” கொடுத்த 3 ஆப்ஷன்.. பகீர் புகார் கிளப்பும் இம்ரான் கான்.. பின்னணி?
பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்த வந்தது. மேலும், ஸ்காட் மாரிசன் அரசு தொடர்ந்து சீனாவை விமர்சித்து வந்தது.
முக்கிய ஒப்பந்தம்
இதனால் அதிருப்தி அடைந்த சீனா ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிரடியாக வரியை உயர்த்தியது. இதற்குப் பதிலடியாக ஆஸ்திரேலியாவும் சில பொருட்களுக்கு வரியை உயர்த்தியது. இதனால் ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக IndAus ECTA என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பரஸ்பர நம்பிக்கை
இந்தியத் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய தொழில்துறை அமைச்சர் டான் டெஹான் ஆகியோர் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. குறுகிய காலத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது இரு நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி
இது தொடர்பாகப் பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "இரு நாடுகளின் பொருளாதார தேவைகளைப் பரஸ்பரம் இரு நாடுகளும் நிறைவேற்றக் கொள்ளலாம். இரு நாடுகளுக்கும் இதற்கான ஆற்றல் உள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும். இது இரு நாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய தருணம். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையேயான விநியோகம் அதிகரிக்கும். மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையும் அதிகரிக்கும். மேலும், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் பரிமாறிக்கொள்ளலாம்" என்றார்.
பிரதமர் ஸ்காட் மாரிசன்
இந்த ஒப்பந்தம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், "இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவில் இது மற்றொரு மைல்கல் ஆகும். இந்த ஒப்பந்தம் இரு தரப்பிற்கு இடையேயான வர்த்தகத்தை அதிகப்படுத்துவது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, கல்வி என பல்வேறு விஷயங்களில் இரு நாட்டு உறவை ஆழப்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் 14.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வர்த்தகம் நடைபெறும் வாய்ப்பை இந்த ஒப்பந்தம் உருவாக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் ஆதிக்கம்
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் ஆதிக்கம் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதை எதிர்கொள்ளும் விதமாக உலக நாடுகள் பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் ஒன்றிணைந்து குவாட் என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ள இந்த ஒப்பந்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.