பத்திரிகையாளர் டூ சீன உளவாளி- ஜாமீனில் வந்த ராஜீவ் சர்மா அன்னிய செலாவணி மோசடி வழக்கில் மீண்டும் கைது
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ரகசியங்களை சீனாவுக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் 40 ஆண்டுகாலமாக பத்திரிகையாளராக பணிபுரிந்தவர் ராஜீவ் சர்மா. முன்னணி செய்தி ஊடகங்களில் பணியாற்றிய ராஜீவ் சர்மா, ப்ரீலேன்சராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு சீனாவுக்கு உளவு பார்த்ததாக டெல்லி போலீசார் ராஜீவ் சர்மாவை கைது செய்தது. ராஜீவ் சர்மாவுடன் நெருக்கமாக இருந்த சீன பெண், நேபாள இளைஞர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

நாட்டின் ராணுவ நிலைகள், ராணுவ ரகசியங்கள் ஆகியவற்றை சீன உளவுப் பிரிவினருக்கு ராஜீவ் சர்மா கொடுத்து வந்ததும் ஆதாரங்களுடன் அம்பலமானது. இது பத்திரிகையாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராஜீவ் சர்மாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீன் கிடைத்தது.
இந்த நிலையில் இன்று ராஜீவ் சர்மா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு உளவு பார்த்ததால் அவருக்கு ஹவாலா முறையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பினாமி வங்கி கணக்கு மூலம் ராஜீவ் சர்மா பெற்று வந்திருக்கிறார்.
ராஜீவ் சர்மா உள்ளிட்ட சீன உளவாளிகளுக்கு பணம் கொடுப்பதற்காகவே சில போலி சீன கம்பெனிகளும் நமது நாட்டில் தொடங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜீவ் சர்மா, அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications