டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி - இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையினருக்கு எதிராக நாளை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. மருத்துவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லியில் நீட் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கட்கிழமையன்று மௌலானா ஆசாத் மருத்துவக்கல்லூரியில் இருந்து உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் பேரணியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறியதாக தெரிகிறது.

காவல்துறையினர் கூறியதை கேட்காமல் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட மருத்துவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனையடுத்து இருசாராருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் காவல்துறையினர் 7 பேர் காயம் அடைந்ததாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொது சொத்துகளை சூறையாடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினரைக் கண்டித்து 4000 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேர ஊரடங்கு அமலானதால் பின்னர் கலைந்து சென்றனர். இன்றும் போராட்டம் தொடரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது போலீசார் அத்துமீறி தடியடி நடத்தியுள்ளனர் என அனைத்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, நாளைய தினம் காலை 8 மணி முதல் அனைத்து சுகாதார நல சேவைகளில் இருந்து விடுபட்டு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தடியடி நடத்தவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர். மருத்துவர்கள்தான் வன்முறையில் இறங்கியதாகவும் காவல்துறையினரின் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் டெல்லி மாநில காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மருத்துவர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் கொரோனாவிற்கு சிகிச்சை பெற வருவோரின் நிலையும் அவசர சிகிச்சைக்கு வருவோரின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications