காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.. கவுதம் கம்பீர் வலியுறுத்தல்
டெல்லி: நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தனது முதல் பேச்சில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து பேசினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியிலும் பாஜக அபார வெற்றி பெற்றது. இதில் டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங், ஆம் ஆத்மி வேட்பாளர் ஆத்திஷி மெர்லினா ஆகியோரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில் மக்களவை உறுப்பினரான கம்பீர் நாடாளுமன்றத்தில் நேற்று கன்னி பேச்சை பதிவு செய்தார். அப்போது பேசிய கம்பீர் காற்று மாசுபாட்டை பொறுத்த வரை, இந்திய நகரங்களிலேயே டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியின் புறநகரில் உள்ள காசிப்பூர் பகுதி குப்பைகளின் மலையாக மாறிவிட்டது என்று குறிப்பிட்டார்.
கிழக்கு, மத்திய மற்றும் பழைய டெல்லியில் இருந்து குப்பைகள் அங்கு கொட்டப்படுகின்றன. அதன் உயரம் இப்போது 65 மீட்டர். தேசிய தலைநகரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குதுப் மினாரை விட, எட்டு மீட்டர் குறைவாக உள்ளது காசிப்பூரில் கொட்டப்படுள்ள குப்பைகளின் உயரம் என்றார்.
நாடாளுமன்றத்தில் ஜீரோ ஹவரின் போது இப்பிரச்சனையை எழுப்பிய கம்பீர், காற்று மாசை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் டெல்லி அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
இவ்விகாரத்தில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமை ஏற்படுவதற்குள், மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் பேசிய கம்பீர் ஒவ்வொரு ஆண்டும் மாசுபாடு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, அதிகாரிகளால் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் உலகில் 15 மாசுபட்ட நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளன என்றார். சுற்றுச்சூழல் மாசுபாடு மிகவும் கவலைக்குரியது மற்றும் இது அனைவரையும் கடுமையாக பாதிக்கிறது
எனவே இவ்விகாரத்தில் மத்திய அரசு கொள்கை முடிவினை வகுக்க வேண்டும் என மக்களவையில் கவுதம் கம்பீர் வலியுறுத்தினார்.