ஏழை மக்களின் ஆதரவு மோடிக்கே.. பாஜக அமோக வெற்றி பெறும்.. டெல்லியில் எச்.ராஜா பிரச்சாரம்
டெல்லி: டெல்லி மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் அங்கே பிரச்சாரம் ஓய்கிறது. இதனையடுத்து தலைநகரில் முகாமிட்டுள்ள பாரதிய ஜனதா தேசிய செயலாளரான எச்.ராஜா, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.
டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதிகளான ஜல் விஹார், காமாட்சி மந்திர், மலை மந்திர், மோதி நகர், சாஸ்திரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், ஏழை மக்களை மனதில் வைத்து தான் பல்வேறு நலத்திட்டங்கள் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர்.
அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த மக்கள் அனைவரும், இம்முறை பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவிற்கு தான் ஓட்டு போடுவார்கள். மோடி அரசின் நலத் திட்டங்கள் தொடர வேண்டுமானால், மீண்டும் மோடி ஆட்சி தான் அமைய வேண்டும்.
அவ்வாறு மோடி பிரதமராகாவிட்டால் 1979, 1989, 1991, 1996 உள்ளிட்ட ஆண்டுகளில் ஏற்பட்ட குழப்பநிலையே மீண்டும் ஏற்படும். மக்களே அதற்கு இடம் தராதீர்கள் தீர்கமாக முடிவெடுத்து வாக்களியுங்கள் பிரதமராக மோடி தான் வர வேண்டும் என்று.
மோடியால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தரமுடியும். நிலையான ஆட்சி அமையாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும். டெல்லியில் குடிசைப் பகுதிகளில் வாழும் தமிழர்கள், இத்தேர்தலில் பாஜகவை ஆதரிக்கின்றனர். எனவே ஏழை மக்களின் ஆதரவுடன் பாஜக வரும் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications