அடேங்கப்பா! அரசு பங்களா, ரூ.1.50 லட்சம் ஓய்வூதியம்! ஓய்வுபெற்ற ராம்நாத் கோவிந்திற்கு இத்தனை சலுகைகளா
டெல்லி: நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்திற்கு ஓய்வுக்குப் பின்னர் ஓய்வூதியமாக என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவரான அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர்.
21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக்குவதற்கு நாடு தயாராகி வருகிறது- ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
திரௌபதி முர்மு
பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிட்ட நிலையில், கூட்டணியில் இல்லாத பல கட்சிகளும் கூட திரௌபதி முர்முக்கு ஆதரவு அளித்தன. இதனால் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்ற திரௌபதி முர்மு எளிதாகக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே அவர் வெற்றிக்குத் தேவையான 50% வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
ஓய்வு பெற்ற ராம்நாத் கோவிந்த்
திரௌபதி முர்மு இன்று நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் மிக உயர்ந்த பதவியில் ஐந்து ஆண்டுகள் இருந்த ராம்நாத் கோவிந்த் நேற்று உடன் ஓய்வு பெற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில், குடியரசுத் தலைவரின் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதிய திருத்தச் சட்டம், 1951இன் கீழ் ஓய்வூதியத் தொகை மற்றும் சில சலுகைகள் ராம்நாத் கோவிந்திற்கு கிடைக்கும்.
ஓய்வூதியம்
அவருக்கு மட்டுமில்லை.. அனைத்து ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர்களுக்கும் இது பொருந்தும். குடியரசுத் தலைவரின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தச் சட்டம், 2008இன் படி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1.50 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு ஓய்வூதியத் தொகை ரூ.50,000ஆக இருந்தது. இது ஓய்வூதியம் மட்டுமே. இது மட்டுமின்றி, அனைத்து முன்னாள் குடியரசுத் தலைவர்களுக்கும் பல்வேறு படிகளும் (allowance) வசதிகளும் கிடைக்கும்.
அரசு பங்களா
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் தான் குடியரசுத் தலைவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். கோவிந்தின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதி முடிவடைந்ததால், அவர் இனி ராஷ்டிரபதி பவனில் தங்க முடியாது. திரௌபதி முர்மு இனி ராஷ்டிரபதி பவனில் தங்குவார். எனவே, முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த்திற்கு டைப் 8 அரசு இல்லம் ஒதுக்கப்படும். 12, ஜன்பத்தில் 8 அறைகளைக் கொண்ட இல்லம் இப்போது ராம்நாத் கோவிந்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இணையச் சேவை
இந்த பங்களாவில் தான் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தங்கி இருந்தார். அதன் பின்னர் இந்த பங்களா ரயில்வே அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவுக்கு ஒதுக்கப்பட்டது. இருப்பினும், அவர் இங்குக் குடியேறவில்லை. இதனால் இப்போது இந்த பங்களா ராம்நாத் கோவிந்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு இரண்டு லெண்ட்- லைன் தொலைப்பேசிகள், ஒரு மொபைல் போன், இணைய இணைப்பு, இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்கப்படும்.
கார் மற்றும் இலவச டிக்கெட்
முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில் ராம்நாத் கோவிந்திற்கு டெல்லி போலீசார் உரிய பாதுகாப்பை வழங்குவார்கள். அவருக்கு ஒரு காரும் அதற்கான டிரைவரும் வழங்கப்படும். ராம்நாத் கோவிந்திற்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும். மேலும், அவர் பயணம் செய்ய இலவச முதல் வகுப்பு ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவரின் மனைவிக்கும் ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாய் வழங்கப்படும்.