ஜனாதிபதி தேர்தல்- மமதாவின் ஸ்கெட்ச்சுக்கு தொடரும் செட்பேக்.. உத்தவ் தாக்கரே ஆப்சென்ட் என அறிவிப்பு!
டெல்லி: நாட்டின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி டெல்லியில் வரும் 15-ந் தேதி கூட்டியுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பான ஆலோசனைகள் களைகட்டி உள்ளன.
நபிகள் நாயகம் அவதூறு: மோடியின் அமைதி தற்செயலானது அல்ல- முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி சந்தேகம்
மமதாவின் கடிதம்
பாஜக அல்லாமல் இதர எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் மமதா பானர்ஜி வரும் 15-ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு மமதா கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பாஜக அல்லாத 8 மாநிலங்களின் முதல்வர்கள், 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடித விவரம்
அதில், மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகள் எதிர்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு சீர்குலைக்கப்பட்டுவிட்டது. இப்படியான நிலையில் எதிர்க்கட்சிகள் நாம் நமது வலிமையை வெளிப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் பாதுகாவலரான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மிகவும் முக்கியமானது. ஜனநாயகக் கொள்கைகள் சீர்குலைக்கப்படும் சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும் என்று மமதா வலியுறுத்தி இருந்தார்.
சீதாராம் யெச்சூரி
மமதா பானர்ஜியின் இந்த கூட்ட ஏற்பாட்டுக்கு எடுத்த எடுப்பிலேயே இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களை அனைவருடனும் கலந்து பேசி ஆலோசித்துதான் முடிவு எடுக்க வேண்டும். ஒருதலைவரே ஒருதலைபட்சமாக முடிவெடுத்து ஆலோசனை கூட்டத்தை கூட்டுவது எப்படி சரியாக வரும்? இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என கூறியிருந்தார்.
சிவசேனா நிலைப்பாடு
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மமதா பானர்ஜியின் ஆலோசனை தொடர்பாக கடிதம் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் அன்றைய தினம் அயோத்தி தொடர்பான கூட்டம் ஒன்று உள்ளது. மமதா பானர்ஜியின் கூட்டத்தில் எங்களது கட்சி பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்வார் என்றார். இடதுசாரிகள் எதிர்ப்பைத் தொடர்ந்து சிவசேனாவின் இந்த முடிவு மமதா பானர்ஜிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.