வேளாண் மசோதா.. இந்திய விவசாய வரலாற்றில் ஒரு திருப்புமுனை.. பிரதமர் மோடி
டெல்லி: வேளாண் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது இந்திய விவசாய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நிறைவேறியது.
ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று நிறைவேறியது. அப்போது எதிர்க்கட்சிகள் அமளி துமளியில் ஈடுபட்டனர். மசோதாக்களின் நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள் அவையின் மையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு.. ஹரியானாவில் மாஸ் மறியல் நடத்திய விவசாயிகள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் போட்டுள்ளார். அவர் கூறுகையில் வேளாண் மசோதா நிறைவேறியது இந்திய வேளாண் வரலாற்றில் முக்கியமான தருணம், திருப்புமுனையாகும்.
இந்த மசோதா நிறைவேறியதற்கு கடும் உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இந்த மசோதா வேளாண் துறையில் முழு மாற்றத்தையும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயருவதையும் உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து மோடி ட்வீட் வெளியிட்டுள்ள நிலையில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.