பியாந்த் சிங் படுகொலை வழக்கு: ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு
டெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி பியாந்த்சிங் உட்பட 16 பேர் தற்கொலைப்படை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். பப்பர் கல்சா எனும் சீக்கியர் தனி நாடு கோரும் அமைப்பு இத்தாக்குதலை நடத்தியது. இதில் மனித வெடிகுண்டாக செயல்பட்டது தில்வார்சிங் என்ற பஞ்சாப் போலீஸ் அதிகாரி. அவருக்கு அடுத்ததாக பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபிளான ரஜோனா 2-வது மனித வெடிகுண்டாக தயார் நிலையில் இருந்தார். ரஜோனா மீதான வழக்கில் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி சண்டிகர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. ரஜோனாவை 2012 மார்ச் 31-ல் தூக்கிலிடவும் தேதி குறிக்கப்பட்டது.

ஆனால் சீக்கியர் தலைவர்களின் அழுத்தங்களால் ரஜோனா தூக்கிலிடப்படவில்லை. இந்நிலையில் ரஜோனாவின் தூக்கு தண்டனையை மத்திய உள்துறை அமைச்சகம் ஆயுள் தண்டனையாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரஜோனா தூக்கிலிடப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் ரஜோனா ஒரு மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவில், 2019-ம் ஆண்டும் தமது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால் இது தொடர்பாக தமக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம்நாத், சஞ்சய் கரோர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மார்ச் 2-ந் தேதி இறுதி விசாரணை நடத்தியது. ரஜோனா சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரத்தோகி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கேஎம் நடராஜ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். இன்று இவ்வழக்கில், ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பியாந்த் சிங் படுகொலை வழக்கில் 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் ரஜோனா.
ரஜோனாவின் தூக்கு தண்டனையை எதிர்த்து ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications