டோக்கியோவிலிருந்து வந்தவுடன் பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவார் பிவி சிந்து.. தந்தை ரமணா நெகிழ்ச்சி
டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது வெண்கல பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவார் என அவரது தந்தை பிவி ரமணா தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து காலிறுதி போட்டியில் ஒரு செட் கூட தோல்வி அடையாமல் விளையாடினார்.
அரையிறுதி போட்டியில் இரு செட்களிலும் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிவி சிந்து சீனாவின் பிங்க்ஜியோவுடன் மோதினார்.

சீன வீராங்கனையை வீழ்த்திய சிந்து
இதில் 21-13, 21-15 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவுக்காக இரண்டாவது பதக்கம் பெற்று சாதனை படைத்தார். கடந்த ஒலிம்பிக் போட்டியிலும் பிவி சிந்து வெண்கலம் வென்றார். ஒலிம்பிக் போட்டிகளுக்காக டோக்கியோ செல்வதற்கு முன்னர் பிவி சிந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

போட்டி
அப்போது அவர் சிந்துவின் டயட் குறித்து கேட்டார். அதற்கு சிந்து, போட்டிகளுக்கு தயாராகி வருவதால் எனக்கு மிகவும் பிடித்தமான ஐஸ்கிரீமை நான் சாப்பிடுவதில்லை என்றார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் இருந்து பதக்கத்துடன் வந்தால் சிந்துவுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

பிவி சிந்துவின் தந்தை ரமணா
இதுகுறித்து பிவி சிந்துவின் தந்தை பிவி ரமணா கூறுகையில் டோக்கியோவிலிருந்து வந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவார். பிரதமர் மோடி, சிந்துவுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து இரு பதக்கங்களை பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நற்பெயர்
இந்தியாவுக்கு நற்பெயரையும் புகழையும் சிந்து கொடுத்துள்ளார். சிந்து மிகவும் கவனத்துடன் வெறியுடனும் அதே நேரம் ரசித்தும் விளையாடுவார். அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் வெண்கலமும் மிகப்பெரிய சாதனைதான். ஒலிம்பிக்கிற்கு எப்போது சென்றாலும் ஒரு பதக்கத்தை தட்டி வருவார் என்ற பெயர் கிடைத்துள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம்
கடந்த முறையை போன்று இந்த முறையும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார் என்றார் ரமணா. சிந்துவின் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் டோக்கியோ ஒலிம்பிக் 2020- இல் வெண்கலம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஒலிம்பிக் வீரர்களில் சிறப்பானவர்களில் ஒருவராக சிந்து திகழ்கிறார் என மோடி ட்வீட் போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications