கொரோனா பாதிப்பால் இப்படியும் ஒரு பாதிப்பா? ஆண்களுக்கு "ஷாக்" கொடுக்கும் எய்ம்ஸ் ஆய்வு முடிவு
டெல்லி: கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணுவின் தரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான ஆய்வு 30 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்டது என்றும் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இன்னமும் பரவிக் கொண்டுதான் உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதன்பிறகு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தொற்று பரவலின் வேகமும் தீவிரம் தணிந்துள்ளது.
இந்தியாவில் மேலும் 4 பேருக்கு பிஎப் 7 வகை கொரோனா.. அமெரிக்காவில் இருந்து மே.வங்காளம் வந்தவர்கள்
பிஎப் 7 வகை கொரோனா
தற்போது பெரும்பாலும் இயல்பு நிலை திரும்பிவிட்டாலும் சீனாவில் பரவிக்கொண்டு இருக்கும் பிஎப் 7 வகை கொரோனா அச்சுறுத்த தொடங்கியதால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க கொரோனா தீவிரமாக பரவிய போது மக்களுக்கு உடல் பாதிப்புகளை தாண்டி மன ரீதியிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில், கொரோனா வைரசினால் ஆண்களின் விந்தணுவின் தரத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக புதிய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.
விந்தணுக்களை உருவாக்கும் செல்களில்..
கொரோனா வைரஸ் (SARS-CoV-2) பாதிக்கப்பட்ட 30 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியானதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவு க்யூரஸ் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆய்வாளர்கள் அடங்கிய குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பல உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆஞ்சியோடென்சின்-மாற்றும் என்சைம்-2 ரெசிப்டர் (ACE2) மூலமாக விந்தணுக்களை உருவாக்கும் செல்களான டெஸ்டிகுலம் திசுக்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ்கள் இருந்துள்ளது.
முதல் பரிசோதனையில்..
பாட்னா மருத்துவமனையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021 கால கட்டங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 வயது முதல் 43 வயதுக்கு உள்பட்ட 30 ஆண்களின் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்களிடம் சேகரிக்கப்பட்ட விந்தணுக்களில் இருந்து நிகழ்நேர ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 74 நாட்கள் கழித்து இரண்டாவது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முதல் பரிசோதனையில் விந்தணுவின் எண்ணிக்கை, விந்தணு செறிவு உள்பட விந்தணுவின் தரம் பாதிக்கப்பட்டு இருந்தது.
தரம் மோசமான அளவிலேயே இருப்பதாக..
இரண்டாவதாக செய்யப்பட்ட பரிசோதனையில், முடிவுகள் தலைகீழாக மாறினாலும் போதிய அளவுக்கு மாறவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் மூலம் கொரோனா பாதிப்பு விந்தணுவின் அளவு உள்ளிட்டவற்றில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது தெளிவாக பரிந்துரைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது முறை செய்யப்பட்ட பரிசோதனையில் விந்தணுவில் கொரோனா வைரஸ் இல்லையென்றாலும் விந்தணுவின் தரம் மோசமான அளவிலேயே இருந்ததாகவும் ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.