ஊழல் குற்றச்சாட்டும்...ரபேல் விமானமும்...கம்பீரமாக இறங்கியது!!
டெல்லி: மனோகர் பாரிக்கர் இன்று நம்முடன் இல்லை. ரபேல் போர் விமானங்கள் இன்று இந்திய மண்ணில் இறங்குவதற்கு அடித்தளம் போட்டவர் அவர்தான். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக மனோகர் பாரிக்கர் இருந்தபோது பிரான்சு நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால், இன்று அவர் நம்முடன் இல்லை. இவரை இன்று நாடே நினைத்துக் கொண்டு இருக்கிறது.
இவரை நினைவு கூர்ந்து பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இன்று ரபேல் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கு காரணம் மனோகர் பாரிக்கர். அமெரிக்காவின் கணக்கில் ஆயுதங்கள் வாங்குவதற்கு என்று 3 பில்லியன் அமெரிக்க டாலர் இருப்பதை கண்டறிந்தார். நாட்டுக்கு என்ன தேவை என்பதை தொலைநோக்குப் பார்வையுடன் ஆராய்ந்து செய்தார் என்று பதிவிட்டுள்ளனர்.
பாரிக்கர் அவர்களே! உங்கள் கனவு நனவாகியது.. ரஃபேல் விமானங்கள் வந்துவிட்டன.. வரவேற்க நீங்கள் எங்கே?
36 ரபேல் விமானங்கள் ஒப்பந்தம்
2019, செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி ரபேல் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 58,000 கோடி ரூபாய், முதலீட்டில், 36 ரபேல் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இன்று வரை நமக்கு பத்து ரபேல் விமானங்கள் கிடைத்துள்ளன. இதில் ஐந்து ரபேல் இன்று அம்பாலா விமானப் படை தளத்துக்கு வந்துள்ளன. மீதமுள்ள ஐந்து விமானங்கள் பிரான்சு நாட்டில் பயிற்சி விமானங்களாக இருக்கும். இதுவரை 12 விமானிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று அம்பாலா இறங்கி இருக்கும் விமானப் படை தளத்தை சுற்றிலும் 114 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019ல் வந்து இருக்க வேண்டும்
2019ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2021க்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று ஐந்து ரபேல் விமானங்கள் வந்து இறங்கியுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டு
பிரான்சு நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முதலில் 15 சதவீத பணம் முன்பணமாக கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் ரபேல் வாங்குவதில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதாவது, இந்த விமானங்கள் தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடெட் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. 2012ஆம் ஆண்டில் காங்கிரஸ் செய்து கொண்டு இருந்த ஒப்பந்தத்தை விட கூடுதலாக மூன்று மடங்கு பாஜக அரசு செய்து கொண்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
ரிலையன்ஸ் சேர்ப்பு
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஹெச்ஏஎல் நிறுவனத்தின் பெயர் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. விமானத் தயாரிப்பில் அனுபவம் கொண்ட ஹெச்ஏஎல் நிறுவனத்தைத் தவிர்த்து, பெரிய அளவில் வாராக்கடனில் சிக்கி இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரூ.30,000 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
எது உண்மை
ஒரு விமானத்தின் விலை முன்பு ரூ.526 கோடி என்று முன்பு முடிவு செய்யப்பட்டு இருந்தது என்றும், அது தற்போது ரூ.1,670 கோடி என்று உயர்த்தியது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. புதிய ஆயுதங்கள் பொருத்தப்படுவதால் விலை அதிகம் என்று பாஜக அரசு கூறியது.
கோவா முதல்வராக பொறுப்பேற்பு
இந்த நிலையில் கோவா முதல்வராக பதவியேற்க இருந்த மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை 2017, மார்ச் 14ஆம் தேதி ராஜினாமா செய்தார். பின்னர் கோவா முதல்வராக பொறுப்பேற்றார். 2017ஆம் ஆண்டில் நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் உயிரிழந்தார். இன்று ரபேல் அவரை நமக்கு நினைவுபடுத்துகிறது