போட்டோ போட்டது தப்பு.. ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாவிலும் ராகுலுக்கு செக்.. களமாடும் என்.சி.பி.சி.ஆர்
டெல்லி: ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பேஸ்புக் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 9 வயது சிறுமி குடும்பத்தின் புகைப்படங்களை ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்த நிலையில்தான், ட்விட்டர் ராகுல் காந்தியின் கணக்கை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இது தங்கள் விதிகள் மற்றும் சட்டவரைமுறைக்கு எதிரானது என ட்விட்டர் கூறியுள்ளது.
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்து, சிறுமி பலாத்கார சம்பவம் தொடர்பான புகைப்படம் பகிர்ந்த விவகாரத்திற்காக, முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளருமான அஜய் மகான், கட்சியின் லோக்சபா கொறடா மாணிக்கம் தாக்கூர், அசாம் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில், 9 வயது சிறுமி குடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாட்டின் உச்சபட்ச குழந்தை உரிமைகள் அமைப்பான தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், (NCPCR) ஃபேஸ்புக் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறுமி தந்தை, தாய் முகங்கள்
பேஸ்புக்கிற்கு எழுதிய கடிதத்தில், ராகுல் காந்தியின், இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டதாகவும், அதில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணின் குடும்பத்தின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது என்றும், இந்த வீடியோவில், இறந்த சிறுமியின் தந்தை மற்றும் தாயின் முகங்களை தெளிவாகக் காணமுடிந்தது, இது சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும் என்று குற்றம்சாட்டியுள்ளது குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்.

சட்டப்படி தப்பு
சிறுவர் நீதி சட்டம், 2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (POCSO) சட்டம், 2012, மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் விதிகளை ராகுல் காந்தி மீறிவிட்டார் என்பதால், இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவர் நீதி சட்டம், 2015 ன் பிரிவு 74, எந்த ஒரு ஊடகத்திலும் ஒரு குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்துவதை தடைசெய்கிறது மற்றும் போக்சோ சட்டம், 2012 இன் பிரிவு 23, ஒரு குழந்தையின் தகவல் அல்லது புகைப்படத்தை எந்த வடிவத்திலும் வெளியிடக்கூடாது என்றும் கூறுகிறது. போக்சோ சட்டத்தின் பிரிவு 23 இன் கீழ் குழந்தையின் பெயர், முகவரி, புகைப்படம், குடும்ப விவரங்கள், பள்ளி, சுற்றுப்புறம் அல்லது குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வழிவகுக்கும் வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படக் கூடாது.

இன்ஸ்டாகிராம் முடக்கம்
ஆகையால், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீடியோவை சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது, சிறுவர் நீதி சட்டம், 2015, போக்சோ சட்டம், பிரிவு 23, 2012, பிரிவு 228A ஆகியவற்றின் பிரிவு 74-ன் கீழ் குற்றம். இதைக் கருத்தில் கொண்டு, ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திர்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கான இணைப்பு இத்தோடு அனுப்பப்படுகிறது. இதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர் ஆக்ஷன்
ஆகஸ்ட் 4 ஆம் தேதி, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த விவகாரம் பற்றி ட்விட்டருக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில்தான் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் லாக் செய்யப்பட்டது. இப்போது இன்ஸ்டாகிராம் எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்போகிறது என தெரியவில்லை. அதேநேரம், இது கருத்துரிமைக்கு எதிரான செயல் என ராகுல் காந்தி ட்விட்டர் நடவடிக்கை குறித்து குற்றம்சாட்டி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications