கூட்டணி யாருடன்.. ராகுல் காந்தி சொன்னது என்ன? டெல்லி ஆலோசனைக்கு பின் செல்வப்பெருந்தகை பரபர பேட்டி
டெல்லி: டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செல்வப்பெருந்தகை பேட்டியளித்தார். அப்போது பொதுவெளியில் கூட்டணி பற்றி பேச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும், குறிப்பாக கூட்டணி பற்றி ட்விட் போடுவது, அறிக்கை விடுவது போன்றவற்றை செய்யக்கூடாது என வேதனையோடு ராகுல் காந்தி கூறியதாக செல்வப்பெருந்தகை பேசினார்.
டெல்லியில் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை, எங்களது கருத்துக்கள் எல்லாவற்றையும் கேட்டதாகவும், தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமையே முடிவு செய்யும் என்று கூறினார்.

காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் இந்த முறை விஜய்யின் தவெக பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்த தொடங்கினர்.
இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையேவே இது தொடர்பாக மோதல்கள் எழத் தொடங்கின. ஆனால் ஆட்சியில் பங்கு கிடையாது என்பதில் முதல்வர் தெளிவாக இருப்பதாக ஐ பெரியசாமி கூறியிருந்தார். இதனால் திமுக காங்கிரஸ் இடையேவே ஒருவித சாதாரண சூழல் இல்லாத நிலை உருவானது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் தொடங்கியது.
3 மணி நேரம் நடந்த கூட்டம்
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 41 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இந்த உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் இக்கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
பொதுவெளியில் பேச வேண்டாம்
தமிழக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடம் அவரது கருத்துக்களை தனித்தனியாக கேட்டறிந்தார். நாங்களும் ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களை தெரிவித்தோம். காங்கிரஸ் தலைவர்கள் இடையே மோதல்கள் இருந்து வருவதை ராகுல் காந்தி விரும்பவில்லை. குறிப்பாக கூட்டணி குறித்து ஒவ்வொருவரும் அவர்கள் கருத்தை தெரிவித்தனர்.
ஒரு தரப்பிரனர் திமுகவுக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில் இதற்கு ராகுல் காந்தி வேதனையுடன் அறிவுறுத்தல் வழங்கினார். பொதுவெளியில் கூட்டணி பற்றி பேச வேண்டாம். குறிப்பாக கூட்டணி பற்றி ட்விட் போடுவது, அறிக்கை விடுவது போன்றவற்றை செய்யக்கூடாது என வேதனையோடு ராகுல் காந்தி கூறினார்.
கூட்டணி பற்றியும், தொகுதி பங்கீடு குறித்தும் கட்சி தலைமை முடிவு செய்யும். இதனை தமிழக காங்கிரசார் பின்பற்ற வேண்டும். என்று கூறினார். கேசி வேணுகோபால் இது தொடர்பாக டெல்லியில் கூறுகையில், கூட்டணி, தமிழக தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரிடமும் பொறுமையாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. அவர் அவர்கள் தங்கள் கருத்தை கூறினர். கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று தலைமை கூறியது” என்றார்.












Click it and Unblock the Notifications