மோடிகள் அனைவருமே திருடர்கள்.. பிரசாரத்தின்போது சரச்சை பேச்சு.. நீதிமன்றத்தில் ராகுல் காந்தி விளக்கம்
டெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, தான் எந்தவொரு சமூகத்தையும் குறிப்பிடும் வகையில் பேசவில்லை என விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்று வந்தது. அதில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜரானார்
என்ன பேசினார்
தேர்தல் பிரசாரத்தின்போது கர்நாடகா மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தி, "நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி, எப்படி அனைவருக்கும் ஒரே பெயர் உள்ளது. இங்கு நாட்டிலுள்ள அனைத்து திருடர்களும் மோடி என்றே அதே குடும்ப பெயரைக் கொண்டிருப்பது எப்படி" எனப் பேசியதிருந்தார். ராகுலின் இந்தப் பேச்சு அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது.
பாஜக எம்எல்ஏ புகார்
ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டுமொத்த மோடி சமூகம் குறித்தும் அவதூறு கூறும் வகையில் உள்ளதாக பூர்னேஷ் மோடி என்ற பாஜக எம்எல்ஏ கடந்த 2019 ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதமும் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
நேரில் ஆஜர்
அப்போது தான் எதுவும் தவறாகப் பேசவில்லை எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாகத் தனது இறுதி அறிக்கையைப் பதிவு செய்யுமாறு ராகுல் காந்திக்குச் சூரத்தின் தலைமை நீதிபதி ஏ.என்.டேவ் கடந்த வாரம் உத்தரவிட்டார். இந்நிலையில் ராகுல் காந்தி இந்த வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
ராகுல் காந்தி விளக்கம்
எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிப்பிடும் வகையில் தான் பேசவில்லை எனத் தெரிவித்த ராகுல் காந்தி, தான் கிண்டல் (sarcasm) செய்யும் வகையிலேயே பேசியதாக விளக்கமளித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.