ஹரியானா தேர்தலில் மரண அடி வாங்கிய காங்கிரஸ்.. மவுனம் கலைத்த ராகுல் காந்தி சொல்வது என்ன தெரியுமா?
டெல்லி: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மவுனம் கலைத்துள்ளார். ராகுல் காந்தி தமது சமூக வலைதளப் பக்கங்களில், ஹரியானா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது என்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் அரசியல் சாசனத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் ஹரியானா தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் பாஜகவை வீழ்த்த முடியாமல் 3-வது முறையாக தோல்வியைத் தழுவி இருக்கிறது காங்கிரஸ். ஹரியானாவில் காங்கிரஸ் எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை காங்கிரஸ் மேலிடத்தின் அலட்சியம், மாநில தலைவர்களை நம்பியே ஒதுங்கி இருந்தது ஆகியவைதான் குழிதோண்டிப் புதைத்தது என்பது அரசியல் பார்வையாளர்களின் விமர்சனம்.

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிதான் அதிக இடங்களில் (42) வென்றது. காங்கிரஸ் கட்சியால் 6 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. பாஜகவை ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ஜம்மு பிராந்தியத்தில் 29 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் 1 தொகுதியைத்தான் கைப்பற்ற முடிந்தது.
இந்த நிலையில் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது: ஹரியானா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது. இது தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். ஹரியானாவில் பல தொகுதிகளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பான புகார்கள் வந்துள்ளன. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். காங்கிரஸ் தொண்டர்கள் ஓய்வறியா உழைப்புக்கு ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கு நன்றிகள். உரிமைகளுக்காக, சமூக நீதி, பொருளாதார நீதிக்காக, உண்மைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். எப்போதும் மக்களின் குரலையோ எதிரொலிப்போம்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. "இந்தியா" கூட்டணியின் ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது அரசியல் சாசனத்துக்குக் கிடைத்த வெற்றி. ஜனநாயகத்துக்கும் சுய மரியாதைக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications