ராஜ்யசபா சீட் கேட்டு தமிழக காங்கிரஸ் சீனியர்கள் டெல்லியில் முகாம்! சந்திக்க மறுக்கும் ராகுல் காந்தி?
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்டு டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் ராகுலை சந்திக்க அங்கு முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிக்கைகள் அடுத்த வாரத்தில் வரும் என தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. திமுகவால் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவிடம் காங்கிரஸ் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது திமுகவிடம் 39 சட்டசபை தொகுதிகளையும் 2 ராஜ்யசபா சீட்டையும் காங்கிரஸ் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுகவோ கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்தது போல் 25 சட்டசபை தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கொடுத்த திமுக முன்வந்துள்ளது.
ஆனால் காங்கிரஸோ 39 தொகுதிகளிலேயே விடாபிடியாக நிற்கிறது. திமுகவும் 25 க்கு மேல் கொடுக்க முடியாது என கறார் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைந்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை கொடுக்க முடியாது என திமுக தலைமை மறுக்கிறது.
ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள், வரும் 5ஆம் தேதி என்பதால், திமுக கொடுக்கும் 25 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுக் கொண்டு கூட்டணியில் நீடிக்கிறதா, இல்லை வெளியேறுகிறதா என்பது இன்றைக்குள் தெரியவரும். கிட்டதட்ட காங்கிரஸுக்கு திமுக விதித்த அதிகாரப்பூர்வமற்ற கெடு என சொல்லலாம்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம், ப.சிதம்பரம் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.
இதனிடையே, வரும் மாநிலங்களவை தேர்தலில் தங்களுக்கு சீட் கேட்டு திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், கே.வி. தங்கபாலு உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனராம். வழக்கம் போல், ராகுலை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் சீட் கேட்டு வந்திருப்பதால், யாருக்கும் நேரம் ஒதுக்க வேண்டாம் என தனது உதவியாளர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மூத்த தலைவர்கள் எப்படியும் சந்தித்து சீட் பெற்றாக வேண்டும் என தீவிரம் காட்டி வரும் நிலையில் ராகுல் காந்தியோ யாரையும் சந்திக்க முடியாது என கூறி தவிர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. ஒரு வேளை கூட்டணி உறுதியானதும் அந்த மகிழ்ச்சியில் இந்த நிர்வாகிகளை ராகுல் சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications