அடடே.. ராகுல் ஆக்டிவா இருந்தது ட்விட்டரில் மட்டும்தான், அதுவும் போச்சே: பாஜக எம்.பி. தேஜஸ்வி கிண்டல்
டெல்லி: ராகுல் காந்தி ட்விட்டரில் மட்டும் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்து வந்தார், இப்போது அந்த கதவும் சாத்தப்பட்டு விட்டது என்று பாஜக எம்பி மற்றும் பாஜக கட்சியின் இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா கிண்டல் செய்துள்ளார்.
டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வந்தார்.
மத்திய அரசு இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வலியுறுத்தி கேட்டு வந்தார்.

ட்விட்டர் நடவடிக்கை
இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை சமீபத்தில் அவர் டுவிட்டரில் பதிவு செய்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களை வெளியுலகத்திற்கு காட்டியது தவறு என்ற விதிமுறையை காரணம்காட்டி ராகுல் காந்தி டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி கண்டனம்
ஆனால் இந்திய அரசியல் விவகாரங்களில் ட்விட்டர் தலையிடுவதாக கூறி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் தேஜஸ்வி சூர்யா அளித்துள்ள பேட்டியில் ராகுல் காந்தியை கிண்டல் செய்துள்ளார்.

தேஜஸ்வி சூர்யா பேட்டி
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை வெளியிடுவது சட்டவிரோதமானது. மனிதத் தன்மைக்கு எதிரானது. இதை செய்த ராகுல் காந்தி கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். ராகுல் காந்தி இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை பொதுவெளியில் வெளியிட்டது சரியா தவறா என்பது மட்டும் தான் இப்போது இருக்கக்கூடிய வாதம்.

கிண்டல்
ராகுல் காந்தி ட்விட்டரில் மட்டும் தான் இயங்கிக் கொண்டு இருந்தார். துரதிருஷ்டவசமாக அந்தக் கதவையும் மூடி விட்டது ட்விட்டர் நிர்வாகம். இவ்வாறு தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications