மோடிக்கு திடீர் கடிதம் எழுதிய ராகுல் காந்தி.. மீண்டும் விஸ்வரூபமாகும் காஷ்மீர் விவகாரம்.. பின்னணி
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி திடீரென்று இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக மாற்றம் செய்வதற்கான மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்கி உள்ளது. இந்த மாதம் 21ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.

அப்போது மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தின் லோக்சபாவின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‛‛ கடந்த 5 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மக்கள் முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த காலங்களில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன.
ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு அது பொருந்தாமல் உள்ளது. ஒரு முழுமையான மாநிலம் அதன் பிரிவினைக்கு பிறகு யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாக அமைந்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்க வேண்டும். இதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டும். இந்தக் கோரிக்கை நியாயமானது. இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது'' என ராகுல் காந்தி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரை எடுத்து கொண்டால் முதலில் அது மாநிலமாக இருந்தது. கடந்த 2019ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. அதன்படி ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் இன்னொரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு சார்பில் அதில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி ராகுல் காந்தி கடிதம் எழுதி இருந்தாலும் கூட மத்திய அரசு சார்பில் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்குவது தொடர்பான மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரும் திட்டம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications