தேஜஸ் இனி தாம்பரத்திலும் நின்று செல்லும்! எம்பி சு.வெங்கடேசன் வைத்த கோரிக்கை! ரயில்வே அமைச்சர் உறுதி
டெல்லி: சென்னை முதல் மதுரை வரை இயக்கப்படும் 'தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் உறுதியளித்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விரைவாக செல்ல ஏதுவாக தேஜஸ் அதிவிரைவு ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.
இதன் மொத்த பயண நேரம் 6.30 மணி நேரம் என்பதால்தான் இந்த ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

தாம்பரம்
ஆனால் இந்த ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன். இதுதொடர்பான மனுவில், "தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லலாம் என தெற்கு ரயில்வே பரிந்துரைத்திருக்கிறது. ஆனால் இதற்கு ரயில்வே போர்ட்டு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. எனவே அமைச்சர் இதில் தலையீடு செய்து ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். இதனயைடுத்து ரயில் பவனில் DREU மற்றும் ICF தொழிற்சங்க தலைவர்களுடன் அமைச்சரை சந்தித்துள்ளார். அப்போது 13 அம்சங்கள் அடங்கிய கொரிக்கை மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கோரிக்கைகள்
இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருப்பதாக எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இதில் முக்கியமான கோரிக்கை, தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ரயில் மோதி இறப்பதை தடுக்க அவர்களுக்கு 'இரட்சக்' எனும் கருவி வழக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த கோரிக்கையையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்திருப்பதாக எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இந்த மனுவில் மேலும் சில கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொழிற்சங்க தேர்தல்
அதாவது, 4800, 5400 கிரேடு பேக்களுக்கு பதவி உயர்வு வழங்க அக்கவுண்ட்ஸ் அல்லாத கேட்டகரிகளுக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளதை போல இதில் விடுபட்ட கேட்டகரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் புதிய தொகுப்பு சட்டத்தின் படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது எனவே உடனே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உறுதி
'தொழில் உறவு தொகுப்பு சட்டம்' வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், அதுவரை 2013ம் ஆண்டு நடந்த தேர்தலில் 20 சதவிகித வாக்குகளை பெற்ற சங்கங்களுக்கு அங்கீகார அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications