அக்னிபாத் திட்டம்.. இளைஞர்கள் போராட்டம்.. ரயில்வே துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு..!
டெல்லி: அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள், 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மீதம் உள்ளவர்கள் ஒய்வூதியம் இன்றி வெறும் சம்பளத்துடன் வெளியேறும் வகையில் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து பீஹார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் தெலங்கானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில், ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ரயில்வே சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் 3 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளிலும் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் அக்னிபாத் போராட்டத்தில் ஏராளமான ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ரயில்வே நிலையங்களில் இருந்த ஏராளமான கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அக்னிபாத் போராட்டம் காரணமாக சுமார் 60 கோடி பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் தயாரிப்பான செலவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், சாதாரண ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.80 லட்சமும், அதேபோல் பயணிகள் தூங்கும் வசதியுடன் கூடிய ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.1.25 கோடியும், ஏசி வசதியுடன் கூடிய ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.3.5 கோடியும் செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல், ஒரு ரயில் இன்ஜினை தயாரிக்க அரசு தரப்பில் இருந்து ரூ.20 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படுவதாகவும், 12 பெட்டிகளை கொண்ட ரயிலை உருவாக்க ரூ.40 கோடிக்கும் அதிகமான தொகையும், 24 பெட்டிகளை கொண்ட ரயிலை உருவாக்க ரூ.70 கோடிக்கும் அதிகமான செலவு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
மோடி தேசப்பாற்றாளரா? அக்னிபாத் பெயரில் ராணுவத்தை பலவீனப்படுத்துவதாக ராகுல்காந்தி கடும் சாடல்