காசிப்பூர் எல்லையில் தொடரும் பதற்றம்... ''என்ன நடந்தாலும் நகர மாட்டேன் '' ராகேஷ் திகைத் உறுதி!
டெல்லி: டெல்லி-உத்தரபிரதேச எல்லையில் உள்ள காசிப்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
டெல்லியை போன்று இங்கும் சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் உத்தரபிரதேச அரசு உறுதியாக உள்ளதால் அவர்களை அகற்ற முடிவு செய்து வருகிறது.
பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் அங்கு வந்து விவசாயிகளுடன் முகாமிட்டு உள்ளார். சரணடைய மறுத்து வரும் அவர், குடியரசு தின வன்முறை குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
திசை மாறியது
வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் 2 மாதங்களாக அமைதியாக போராடி வந்தனர். ஆனால் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து போராட்டம் திசை மாறியது.ஏறக்குறைய 5 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டன.
காசிப்பூர் எல்லையில் பதற்றம்
இந்த நிலையில்தான் ஏற்கனவே போராட்டம் வரும் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி சந்திக்கும் பகுதியான காசிப்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து விட்டனர். இந்த காசிப்பூர் உத்தரபிரதேச எல்லையில் உள்ளதால் டெல்லியை போன்று இங்கும் சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் உத்தரபிரதேச அரசு உறுதியாக உள்ளது.
குண்டுகள் ஏந்துவேன்
ஆனால் பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் அங்கு வந்து விவசாயிகளுடன் முகாமிட்டு உள்ளார் போலீசார் அவரிடம் சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ராகேஷ் திகைத் சரணடைய தொடர்ந்து மறுத்து வருகிறார். அங்கு இருந்து பின்வாங்க மறுத்து வருகிறார். ''விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராடுவேன். உண்ணாவிரதம் இருப்பேன் . எனது சொந்த கிராமத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து குடித்து எங்கும் போராட்டம் நடத்துவேன். விவசாயிகளின் போராட்டத்திற்காக துப்பாக்கி குண்டுகளை ஏந்த நான் தயாராக இருக்கிறேன்'' என்று அவர் ஏற்கனவே கூறினார்.
விசாரிக்க வேண்டும்
அங்கு போலீசார் முழுவதும் சுற்றியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து விலகி செல்லும்படி ராகேஷ் திகைத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தனது முடிவில் தெளிவாக இருக்கும் ராகேஷ் திகைத், 'டெல்லியில் நடைபெறும் குடியரசு தின வன்முறை குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரிக்க வேண்டும். அனைத்து பாஜக எம்.எல்.ஏக்களையும் எதிர்ப்பு இடங்களில் இருந்து நீக்க வேண்டும். இந்த இடத்தில் அமைதியாக இருக்கிறோம். ஆனால் இங்கு வன்முறையைத் தூண்டுவதற்கான ஒரு திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. என்ன நடந்தாலும் கலைந்து செல்ல மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் காசிப்பூர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.