பலாத்கார வழக்கில் எப்.ஐ.ஆர்.: மூத்த பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹூசைன் மனு உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்!
டெல்லி: 2018-ம் ஆண்டு பலாத்கார வழக்கில் தம் மீதான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டதை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹூசைன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
2018-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஷாநவாஸ் ஹூசேனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், ஷாநவாஸ் ஹூசைன் தம்மை பலாத்காரம் செய்தார்; இது தொடர்பாக புகார் அளித்தால் படுகொலை செய்வேன் என மிரட்டினார். ஆகையால் ஷாநவாஸ் ஹுசைன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
அப்பெண்ணின் மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஷாநவாஸ் ஹூசைன் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஷாநவாஸ் ஹூசைன் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம், ஷாநவாஸ் ஹூசைனின் மனுவை டிஸ்மிஸ் செய்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் ஷாநவாஸ் ஹூசைன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரவீந்தர பட், திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி, சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஷாநவாஸ் ஹூசைன் சார்பாக ஆஜராகினர்.
நண்பனின் உடலை பார்க்க வந்துவிட்டு.. சடலமாக திரும்பிய 3 பேர்.. விமான விபத்தில் சோகம்.. கலங்கும் கேரளா
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த பிரச்சனையில் தலையிடுவதற்கு முகாந்திரம் எதுவும் இல்லை என கூறி ஷாநவாஸ் ஹூசைனின் மனுவை டிஸ்மிஸ் செய்தனர்.
முன்னதாக, ஷாநவாஸ் ஹூசைன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். டெல்லி நீதிமன்ற உத்தரவுப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் அவரது அரசியல் வாழ்க்கையையே அழித்துவிடும். ஆகையால் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்திட வேண்டும் என அவர் தரப்பில் வாதிடப்பட்டது.