அக்னிபாத் திட்டத்தில் ஆள்சேர்ப்பு! போராட்டத்துக்கு மத்தியில் தேதியை அறிவித்த விமானப்படை தளபதி!
டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் ஜூன் 24ல் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கும் என அதன் தலைமை தளபதி விஆர் சவுத்ரி கூறியுள்ளார். அக்னிபாத் திட்டத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பாதுகாப்பு படைக்கான ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலம் சேவையாற்ற முடியும்.
மதியம் 3 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நடந்த கூட்டம்! 10 மணி நேரம் என்ன ஆலோசித்தார் திருமாவளவன்!
இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
அக்னிபாத் திட்டம் அறிமுகம்
அதன்படி அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் பணிக்கு சேரலாம். இவர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம். 4 ஆண்டு பணிக்கு பிறகு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். 25 சதவீதம் பேர் மட்டும் தக்க வைக்கப்படுவர். தக்க வைக்கப்படும் வீரர்கள் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். முதல் ஆண்டு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பளத்தில் 30 சதவீத தொகை பங்களிப்பு தொகையாகப் பிடிக்கப்படும். 4 ஆண்டுக்கு பிறகு ராணுவத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.
இளைஞர்கள் போராட்டம்
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒப்பந்த பணி போன்று இத்திட்டம் உள்ளதால் ஏராளமானவர்களால் நாட்டுக்கு நீண்டகாலம் சேவையாற்ற முடியாமல் போகலாம்.இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளன. பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. ரயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதுடன், வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. ரயில் நிலையங்கள் சூறையாடப்படுகின்றன. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி வருகின்றன.
துப்பாக்கிச்சூடு; வீடு ரயில் நிலையம் சூறை
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் இறந்தார். 15 பேர் காயமடைந்தனர். பீகாரில் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா என்ற இடத்தில் அம்மாநில துணை முதல்வர்(பாஜக) ரேணு தேவியின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் ஒரு பெண் எம்எல்ஏவின் கார் மீது கல்வீசப்பட்டதோடு, இன்னொரு எம்எல்ஏவின் வீடும் சூறையாடப்பட்டது. இதனால் பீகார் உள்பட பல இடங்களில் கொந்தளிப்பான சூழல் உள்ளது.
முப்படைகளில் ஆட்சேர்ப்பு
இருப்பினும் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. போராட்டத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய நிலையில் தொடர்ந்து முப்படை தளபதிகளும் அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
விமானப்படையில் ஜூன் 24
இதுபற்றி இந்திய விமானப்படையில் தலைமை தளபதியான ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி இன்று கூறியதாவது: கொரோனா காரணமாக விமானப்படையில் பணியில் சேருவோரின் வயது 23 ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன். அரசின் இந்த முடிவு வரவேற்க்கத்தக்கது. இது இளைஞர்களுக்கு பயன் அளிக்கும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கை ஜூன் 24ல் துவங்கும்'' என்றார்.
ராணுவ தளபதி கூறியது என்ன?
முன்னதாக இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கூறுகையில், ‛‛அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் அக்னி வீரர்களாக ராணுவத்தில் சேரலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இளைஞர்கள் அனைவரும் அக்னிவீரர்களாக ராணுவத்தில் இணைய முன்வர வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ராணுவ ஆள்சேர்ப்பு நடைபறெவில்லை. இதனால் வாய்ப்புகளை இழந்த இளைஞர்களுக்காக வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் '' என்றார்.