செயற்கை முறை கருத்தரித்தல்.. ஒழுங்குபடுத்தல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்- புதிய விதிகள் என்ன?
: இன்றைக்கு பலரும் வாடகைத் தாய் , செயற்கை கருத்தரிப்பு போன்ற தொழில்நுட்பம் மூலம் குழந்தை பெற்றுகொள்ள ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
டெல்லி: செயற்கை முறை கருத்தருத்தல் தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கருமுட்டை விற்பனையில் ஈடுபடுபவர்கள், முதல் தடவை தவறு செய்திருந்தால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் பிடிபட்டால், அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
செயற்கை முறை கருத்தரித்தல் தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 (Assisted Reproductive Technology (Regulation) Bill, 2020) கருவுறுதல் கிளினிக்குகள் மற்றும் முட்டை/விந்து வங்கிகளுக்கு குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடத்தை விதிகளை அமைக்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
இந்தியாவில் அண்மைகாலமாக செயற்கை கருத்தரிக்கும் மையங்கள் புற்றீசல் போல் முளைக்க தொடங்கியுள்ளது. குழந்தை பெறுவதில் கணவர், மனைவி ஆகியோரிடம் குறைபாடுகள் காணப்படுவது அதிகரித்துள்ள சூழலில், பலரும் வாடகைத் தாய் , செயற்கை கருத்தரிப்பு போன்ற தொழில்நுட்பம் மூலம் குழந்தை பெற்றுகொள்ள ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசு அறிமுகம்
இதனால், செயற்கை கருத்தரிக்கும் மையங்கள் அபரிமிதமாக வளர்ச்சி பெற தொடங்கியது. எனினும், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றை அவை சரியாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இதையடுத்து தானம் செய்பவர், தம்பதி மற்றும் குழந்தை ஆகியோரின் உரிமையை பாதுகாக்கும் விதமாக செயற்கை முறை கருத்தரிக்கும் முறை தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020ஐ கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
லோக்சபாவில் தாக்கல்
கருவுறுதல் கிளினிக்குகள் மற்றும் முட்டை/விந்து வங்கிகளுக்கு குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடத்தை விதிகளை அமைக்க இந்த சட்டம் முயல்கிறது. இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை அபராதம் ஆகியவை விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. இந்நிலையில் செயற்கை முறை கருத்தரித்தல் தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சர் மன்சுக் மாண்டவியா
மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மன்சுக் மாண்டவியா , நாடு முழுவதும் ஏராளமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள், எவ்வித ஒழுங்கு விதிகளுக்கும் உட்படாமல் இயங்கி வருகின்றன. செயற்கை கருத்தரிப்புக்கு வரும் தம்பதிகளின் உடல்நிலையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இத்தகைய மசோதாவை கொண்டு வருவது அவசியம் ஆகிறது என்றார்.
இந்த மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு பல்வேறு சிபாரிசுகளை தெரிவித்தது. மத்திய அரசு அவற்றை பரிசீலித்து, இறுதியாக இம்மசோதாவை உருவாக்கி உள்ளதாகவும் கூறினார்.
செயற்கை கருத்தரிப்பு மையங்கள்
இதுகுறித்து பேசிய பாஜக எம்.பி. ஹீனா கேவிட் , 80 சதவிகித செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு செய்யப்படவில்லை. செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கும், கருமுட்டை, விந்தணு வங்கிகளுக்கும் குறைந்தபட்ச நன்னடத்தை விதிமுறைகள், இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன என்றார்.
மாநிலங்களவையில் நிலுவை
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த என்.கே.பிரேம் சந்திரன். இந்த மசோதா, வாடகைத்தாய் மசோதாவை சார்ந்து உள்ளது. வாடகைத்தாய் மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த மசோதாவை விவாதத்திற்கு எடுத்துகொள்ளக் கூடாது என்று பேசினார்.
அமைச்சர் உதவி
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், இரண்டு மசோதாக்களும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து செயற்கை முறை கருத்தரிப்புக்கு உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
12 ஆண்டுகள் சிறை தண்டனை
செயற்கை கருத்தரிப்புக்கு வரும் தம்பதிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கருமுட்டை தானமாக வழங்குபவர்கள், அதை பெறுபவர்களும் மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். கருமுட்டை விற்பனையில் ஈடுபடுபவர்கள், முதல் தடவை தவறு செய்திருந்தால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் பிடிபட்டால், அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.