ஆர்டரை தயார் செய்வதில் தாமதம்.. டெல்லி உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை.. டெலிவரி பாய் உட்பட மூவர் கைது
டெல்லி: உணவு ஆர்டரைத் தயாரிப்பதில் தாமதமானதில் ஏற்பட்ட தகராறில், டெல்லியில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஸ்விகி டெலிவரி பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உணவகத்தை நடத்தி வந்தவர் சுனில். வழக்கம் போல இன்றும் இவரது கடையிலிருந்து ஆர்டரை சேகரிக்க டெலிவரி பாய்கள் உணவகத்திற்கு வந்துள்ளனர்,

அப்போது டெலிவரி பாய் ஒருவரது ஆர்டர் தாமதமானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உணவக ஊழியர் ஒருவருடன் அந்த டெலிவரி பாய் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உணவக உரிமையாளர் சுனில் இருவருக்கும் இடையே சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
இருப்பினும், அவர் தலையிட்ட பிறகு பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளது, அப்போது நண்பர்களுடன் வந்திருந்த டெலிவரி பாய், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த உணவக உரிமையாளரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்தவர்களை சுனிலை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இது குறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கினர்.
இதையடுத்து அந்த டெலிவரி பாய் சுனில், அவரது நண்பர்கள் எனக் கூறப்படும் விகாஸ் சவுத்தரி, தேவேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேநேரம் டெலிவரி பாய் சுனில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை என்றும் விகாஸ் சவுத்தரி தான் உணவக உரிமையாளரைக் கொன்றார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications