மாநில உரிமைகள் பறிபோகும்.. ஐஏஎஸ் விதி திருத்தத்திற்கு எதிராக மோடிக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் கடிதம்
டெல்லி: ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து எம்பிக்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்ட கடிதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். இவர்கள் அவ்வப்போது மத்திய அரசு பணிகளுக்கும் மாற்றம் செய்யப்படுவர்.
இந்நிலையில் தற்போதைய ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான வரைவு விதிகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 2021 டிசம்பரில் தயாரித்தது. இதுபற்றி கருத்து தெரிவிக்க அனைத்து மாநில தலைமை செயலாளர்களிடமும் கேட்டு கொள்ளப்பட்டது.

திருத்தத்துக்கு எதிர்ப்பு
இந்த திருத்தத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் தற்போதைய சூழலில் மத்திய அரசு பணிக்கு தேவையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசிடம் கேட்டு பெற வேண்டும். ஆனால் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால் மாநில அரசு விரும்பாத நிலையிலும் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு எடுத்து கொள்ள முடியும். இதனால் பல மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு கருத்து தெரிவிக்கப்படவில்லை. இதனால் நினைவூட்டல் கடிதங்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது.

மோடிக்கு கடிதம்
இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், எம்பிக்கள் கையெழுத்திட்ட கடிதம் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பப்பட்டது. அதில் ஐஏஎஸ் விதிமுறைகளில் திருத்தம் செய்யக்கூடாது என்ற கோரிக்கை பிரதானமாக உள்ளது. பல ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, இந்திய வன சேவை (IFS) அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கூட்டாக இந்த கடிதத்தை மனுவாக தயாரித்துள்ளனர். எம்.பி.க்கள் சிலரும் கூட இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடிதத்தின் அம்சம்
இந்த மனு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. சுகேந்து சேகர் ராய் கூறும்போது, ‛‛எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் செயல்படும் கவர்னர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளோம். குறிப்பாக மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநில கவர்னர்கள் ஒவ்வொரு நாளும் மாநில அரசின் நடவடிக்கைகள், அதிகாரங்களில் தலையிடுகின்றனர். மாநில தேர்தல் ஆணையம், முதல்-அமைச்சர், சபாநாயகர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கின்றனர். இதனால் கவர்னர்கள் மீதான மத்திய அரசின் நடவடிக்கை அவசியமானதாகும் என மனுவில் கூறியுள்ளோம்.

கைவிட வேண்டும்
மேலும், ‛‛ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தால் மத்திய அரசு அதிக அதிகாரத்துடன் செயல்படும். மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அந்தந்த மாநில அரசுகளின் அனுமதியின்றி மத்திய அரசு பணிக்கு நியமிக்க முடியும். இது கூட்டாட்சி முறைக்கும், மாநில அரசின் உரிமைக்கும் எதிரானதாக இருக்கும். இதனால் ஐஏஎஸ் விதிகளில் திருத்தும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்'' என கோரிக்கை வைத்துள்ளோம் எனக்கூறினர்.












Click it and Unblock the Notifications