இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து.. தனியார் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
டெல்லி: ரஷ்யா தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க டாக்டர் ரெட்டி லேபாரட்டரிஸ் நிறுவனத்துடன் அந்த நாடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து 100 மில்லியன் டோஸ் அளவிற்கு தயாரிக்கப்படும்.
இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து தயாரிக்கவும், மனித பரிசோதனை மேற்கொள்ளவும் டாக்டர் ரெட்டி லேபாரட்டரிஸ் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்தியாவில் ஸ்புட்னிக் வி மனித பரிசோதனை துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
6 தடுப்பு மருந்துகளில் 3 வெற்றி நிச்சயம்...இந்தியாவை நம்பி உலக நாடுகள் உள்ளன...பில் கேட்ஸ்!
100 மில்லியன் டோஸ்
ரஷ்யாவின் டைரக்ட் இன்வெஸ்மென்ட் பண்ட் ஏற்கனவே இந்த மருந்து தயாரிப்பதற்கு கஜகஸ்தான், பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் 100 மில்லியன் டோஸ் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மனித ஆய்வு
உலகிலேயே முதன் முறையாக ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை ரஷ்யா பதிவு செய்து இருந்தது. கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மூன்றாம் கட்ட மனித ஆய்வு 40,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இன்னும் இந்த ஆய்வு முடியவில்லை. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மனித ஆய்வில் வெற்றி கிடைத்தால் நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து தயாரிப்பு துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா அதிகாரி
இதுகுறித்து ரஷ்யாவின் டைரக்ட் இன்வெஸ்மென்ட் பண்ட் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமித்ரிவ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''கொரோனா கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எங்களது தடுப்பு மருந்து இந்தியாவுக்கு பாதுகாப்பு அளிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தி
இதுகுறித்து ரெட்டி லேபாரட்டரி தலைவர் ஜிவி பிரசாத் கூறுகையில், ''இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தி ஸ்புட்னிக் வி மருந்தின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்ய இருக்கிறோம். மத்திய அரசின் அனுமதி கிடைத்த பின்னர் மனித ஆய்வு மேற்கொள்ளப்படும். கொரோனாவில் இருந்து மீள்வதற்கு ஸ்புட்னிக் வி நம்பகமான நல்ல முடிவை அளிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனம்
இதுகுறித்து கடந்த வாரம் பேட்டி அளித்து இருந்த நிதி ஆயோக் சுகாதாரத்திற்கான உறுப்பினர் விகே பால், ''இந்தியாவில் மூன்றாம் கட்ட மனித ஆய்வு மேற்கொள்வதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் வி மருந்தை தயாரிப்பதற்கு இரண்டு இந்திய மருத்துவ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது'' என்று தெரிவித்து இருந்தார்.
விளாடிமிர் புடின்
உலகிலேயே மனித ஆய்வு மேற்கொண்ட இரண்டே மாதத்தில் ரஷ்யாதான் ஸ்புட்னிக் வி மருந்தை பதிவு செய்து இருந்தது. ரஷ்யாவின் கமலியா ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் முழு அளவிலான தயாரிப்பு துவங்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து இருந்தார்.
கிளினிகல் ஆய்வு
கொரோனா வைரஸூக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இரண்டு ஆண்டுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். மரபணு சிகிச்சை முறையில் இந்த தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தடுப்பு மருந்து 250 முறை கிளினிகல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்து எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை'' என்று ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
பக்க விளைவு
ஸ்புட்னிக் வி மருந்து குறித்த ஆய்வு மருத்துவ இதழான லான்செட்டில் வெளியாகி இருந்தது. அதிலும், 42 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
செப்டம்பரில் முடிவு
ரஷ்யாவில் முதல் கட்ட ஆய்வில் 40,000 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை. ஆய்வு முடிவுக்குப் பின்னர் 55000 பேர் ஆய்வில் ஈடுபடுவதற்கு பெயர்களை பதிவு செய்து வைத்துள்ளனர். முதல் கட்ட மனித ஆய்வின் பரிசோதனை முடிவுகள் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.