சாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக்கோரிய மனு - தமிழக அரசு பதில் தரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: சாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடைவைத்திருந்த ஜெயராஜூம் பென்னிக்ஸும் லாக்டவுன் விதிமுறைகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
தந்தை, மகன் மரணத்திற்கு நீதிகேட்டு தென்மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. உறவினர்களின் போராட்டம் இந்திய அளவில் தெரியவந்தது. காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது.
தந்தை மகன் மரண வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
இதனையடுத்து தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் மரணமடைந்தார். மற்ற 9 போலீசார் மீதான விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தநிலையில், இந்த வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2 வழக்குகளில், 9 போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக் கோரி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கொரோனாவுக்கு முதல் பலி.. சாத்தான்குளம் தந்தை, மகன் பலி.. தணிகாச்சலம் கைது.. தமிழகத்தை உலுக்கிய 2020
அதில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீஸ்காரர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது. இதுவே, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்காணித்து வருகிறது. குற்றச்சாட்டுகள் பதிவு நிலையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற கவலை உள்ளதால், வழக்கு விசாரணையை கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இதுதொடர்பான மனுவை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷி ராய், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளா மாநிலத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில் சிபிஐ மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய 8 பேரும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக் கூடாது என தெரிவித்து மறைந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.