விதிகளை மீறி கட்டிய 40 மாடி இரட்டை கோபுர கட்டிடம்.. 3 மாதத்தில் இடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 40 மாடி இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வீடு வாங்கியவர்களுக்கு 12% வட்டியுடன் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கட்டிட இடிப்பு செலவை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஏற்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த நொய்டா அரசு அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இரட்டை கோபுரம்
டெல்லி அருகே நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் நிறுவனம் 40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் கட்டியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு 550 குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டிடம் கட்டப்பட உள்ளதாக கூறிய சூப்பர்டெக் நிறுவனம், விதிகளை மீறி அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுக்குமாடி எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி 900-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட 40 மாடி கட்டிடம் ஆக்கிவிட்டது என்று இந்த கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள் 2014-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அப்போது விதிகளை மீறிய இரட்டை கோபுர கட்டிடங்களை 4 மாதங்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும். வீடுகளை வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் எம் ஆர் ஷா அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

3 மாதத்தில் இடிக்கணும்
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ' 40 மாடி இரட்டை கோபுரத்தை 3 மாதத்திற்குள் இடிக்க வேண்டும்.கோபுரத்தை இடிக்கும் செலவை சூப்பர்டெக் நிறுவனமே ஏற்க வேண்டும்.இரட்டைக் கோபுர குடியிருப்பு உரிமையாளர்களுக்கு 12% வட்டியுடன் பணத்தை திருப்பித் தர வேண்டும்'' என்று அதிரடியாக உத்தரவிட்டனர். அதிகாரிகளுக்கும் டெவலப்பர்களுக்கும் இடையே மீண்டும் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டது . நொய்டா அதிகாரிகளின் உடந்தை, கட்டிடத் திட்டங்களை மீறுதல், கட்டிடத் திட்டங்களை குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அதிகாரிகள் மறுப்பது, கட்டிட விதிமுறைகளை மீறுதல் போன்றவை இதில் அரங்கேறி உள்ளன என்று நீதிபதிகள் குற்றம்சாட்டினார்கள்.

பாதுகாப்பு தரம் எங்கே?
இந்த கட்டுமானம் பாதுகாப்பு தரங்களை நீர்த்துப்போகச் செய்கிறது. சட்டவிரோதங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரட்டை கோபுரங்களுக்கு இடையே போதிய இடைவெளி இன்றியும் தேசிய கட்டுமான விதிகளுக்கு விரோதமாகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோபுரங்களைக் கட்டுவதற்காக தோட்டப் பகுதி கைப்பற்றப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கூறினார். மேலும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த நொய்டா அரசு அதிகாரிகளை நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதிகாரிகளுக்கு கண்டனம்
''நீங்கள்(அதிகாரிகள்) உங்கள் கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஊழல் செய்கிறீர்கள். இது ஒரு அதிர்ச்சியூட்டும் அதிகார உடந்தை. வீடு வாங்குபவர்கள் அனுமதிக்கப்பட்ட திட்டத்தை பற்றி கேட்டபோது, கட்டுமான நிறுவனம் அவர்களுக்கு ஆவணத்தை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறவில்லை.ஒரு கட்டிடம் கட்டும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்'' என்று நீதிபதிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications