தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்... செப்.15க்குள் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை ஒத்திப்போடக்கூடாது என்றும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
கொரோனா குறைந்தவுடன் 9 மாவட்டங்களிலும் அனைத்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையாற்றிய நிலையில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். 'வார்டு மறுவரையறை முழுமையாக செய்யப்படவில்லை, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை, அவற்றை செய்து முடிக்கும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதையடுத்து, மனுதாரர் கோரிக்கையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகிய பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடித்து, அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.
அதன்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல்ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கோரி திமுக மீண்டும் வழக்கு தொடர்ந்தது. அந்தவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர இதர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிட்டது.
அதன்படி, 27 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஒரு சில சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி முடிவடைந்தது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தால் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் தேர்தல் நடத்த ஆணையிட்டுள்ளனர். புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.