மகாராஷ்டிரா: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டத்தை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பூர்வகுடிகள் மராத்தா ஜாதியினர். இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்கி 2018-ல் சட்டம் நிறைவேற்றியது மகாராஷ்டிரா அரசு. இந்த சட்டத்துக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லும்; அதேநேரத்தில் இடஒதுக்கீடு அளவானது கல்வியில் 13%; வேலைவாய்ப்பில் 12% இருக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மேல்முறையீட்டு மனுக்களில், 1992-ம் ஆண்டு மண்டல் கமிஷன் வழக்கு அல்லது இந்திரா சஹானி வழக்கில் மாநிலங்களில் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகம் இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆகையால் மராத்தா ஜாதியினருக்கான 16% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் அசோக் பூஷண், எல். நாகேஸ்வர ராவ், எஸ். அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்த பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது மகாராஷ்டிரா அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலியாவது.. "இனப்படுகொலைக்குச் சமம்".. அலகாபாத் ஹைகோர்ட் சாட்டையடி!
மேலும் இடஒதுக்கீடு இன்னும் எத்தனை காலத்துக்கு தொடர வேண்டும்? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 1992-ம் ஆண்டு மண்டல் கமிஷன் வழக்கு அல்லது இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்ற முடியாது. மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி இருப்பதன் மூலம் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாகி இருக்கிறது. ஆகையால் மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினர்.