பா.ஜ.க. ஆதரவுடன் ஜனாதிபதி பதவியை நோக்கி சரத்பவார்.. மகாராஷ்டிரா சிவசேனா கூட்டணி அரசு நீடிக்குமா?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் நாட்டின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முன்னிறுத்தப்படலாம் என்கின்றன டெல்லி தகவல்கள். இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே முட்டல் மோதல் வெடிக்க தொடங்கிவிட்டது. இரு கட்சிகளும் பரஸ்பரம் கடுமையான விமர்சனங்களை முனவைத்து வருகின்றனர்.
அமித்ஷாவுடன் சந்திப்பா?
இந்த நிலையில்தான் அகமதாபாத் பண்ணை வீட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத்பவார் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. அத்துடன் இந்த சந்திப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்த முடியாது என்றார்.
அமித்ஷாவின் பூடகம்
அதாவது சரத்பவாரை தாம் சந்திக்கவே இல்லை என அமித்ஷா மறுக்கவில்லை. அதேநேரத்தில் பகிரங்கமாக எதனையும் சொல்ல முடியாது என பட்டும்படாமலும் பதில் அளித்திருக்கிறார். இந்த நிலையில் சரத்பவாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவசேனா குரல்
மகாராஷ்டிரா அரசியல் பஞ்சாயத்து மூத்த பத்திரிகையாளர்களிடம் நாம் பேசினோம். அப்போது, நாட்டின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக சரத்பவார் இருக்கிறார். சரத்பவாரை பொறுத்தவரையில் பாஜக ஒன்றும் பரம எதிரி எல்லாம் என்பதும் இல்லை. அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் சரத்பவாரை ஆதரிக்க வேண்டும் என அழுத்தமாக குரல் கொடுத்தது சிவசேனா.
பாஜக ஆதரவுடன்?
ஆனால் சரத்பவார் தரப்போ, பாஜகவின் ஆதரவுடனேயே ஜனாதிபதி ஆவதுதான் சரியாக இருக்கும்; எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் என களமிறங்குவதையும் அவர் விரும்பவில்லையாம். மேலும் தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு இந்த முறை ஜனாதிபதி பதவி கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் பாஜகவுக்கும் சரத்பவார் ஒரு தேர்வாக இருக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மகா. கூட்டணி அரசு எதிர்காலம்?
அப்படி ஒருவேளை பாஜகவுடன் சரத்பவார் கை கோர்க்கும் நிலை ஏற்பட்டால் மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு என்னவாகும் என்கிற கேள்வியும் எழுகிறது. அப்போது கூட்டணிகள் தலைகீழாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கும் எதுவும் இல்லை என்றும் அந்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏற்கனவே மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம்நபி ஆசாத்தை வளைத்துப் போட்டு அவரை துணை ஜனாதிபதி ஆக்கும் முயற்சிகளில் பாஜக முனைப்புடன் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.