லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா
காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை செல்லும் பாரத் ஜோடா யாத்திரையின் திட்டமிடலுக்கான குழுவில் எம்பி ஜோதிமணி,சசி தாகூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லி: 2024ம் ஆண்டு லோக்சபாதேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி 3 குழுக்களை அமைத்துள்ளது. அரசியல் விவகார குழு, தேர்தல் செயல்பாட்டு குழு, யாத்திரை குழு ஆகிய 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை செல்லும் "பாரத் ஜோடா யாத்திரையின்" திட்டமிடலுக்கான குழுவில் எம்பி ஜோதிமணி,சசி தாகூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது காங்கிரஸ் கட்சி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வாரம் 3 நாட்கள் "சிந்தனை அமர்வு" மாநாடு நடைபெற்றது. கட்சிக்கு புத்துயிர் ஊட்டவும் பலப்படுத்தவும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு யோசனைகளை முன் வைத்துள்ளனர். சோனியா காந்தி தலைமையில், உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் 'நவ சங்கல்ப்' பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தீவிர ஆலோசனைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டி, ஞாயிற்றுக்கிழமை கட்சியில் ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு போன்ற விதிகளுக்கும் அமைப்பு சீர்திருத்தங்களுக்கான திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்தது.
பெட்ரோல் கலால் வரியை உயர்த்தியது ரூ.26.77, குறைத்தது ரூ.14.50.. ஜோக் காட்றீங்களா? காங்கிரஸ் கண்டனம்
ஒரு குடும்பம் ஒரு பதவி
காங்கிரஸ் காரியக் கமிட்டி உட்பட அனைத்து நிலைகளிலும் உள்ள பதவிகளில் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு 50% பிரதிநிதித்துவம் மற்றும் அனைத்து நிலைகளிலும் பதவியில் இருப்பவர்களுக்கு ஐந்தாண்டு கால வரம்பு விதிக்க வேண்டும் என்ற விதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரு குடும்பம், ஒரு பதவி என்ற விதியில், தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் தலைவர்களின் மகன்கள், மகள்கள் மற்றும் பிற உறவினர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கட்சிக்காக உழைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான பயிற்சி
காங்கிரஸ் தலைவருக்கு முடிவுகளை எடுப்பதற்கு உதவ, காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உள்ள உறுப்பினர்களில் இருந்து ஒரு சிறிய குழு அமைக்கப்படும். அதேபோல், அனைத்து மாநிலங்களிலும் அரசியல் விவகாரக் குழு அமைக்கப்படும். தலைவர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்றும், கட்சியின் தகவல் தொடர்பு அமைப்பு புதுப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. தேர்தல் நிர்வாகத்துக்காக சிறப்பு அமைப்பும் அமைக்கப்படும் எனவும் தகவல் வெளியானது.
3 குழுக்கள் அமைப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக மூன்று குழுக்களை உருவாக்கியுள்ளார். முக்கியப் பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதல், டாஸ்க் ஃபோர்ஸ்-2024 உதய்பூர் 'நவ் சங்கல்ப்' பிரகடனத்தை செயல்படுத்த மற்றும் அக்டோபர் 2 'பாரத் ஜோடோ யாத்ரா' ஒருங்கிணைக்க மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சோனியா தலைமையில் குழு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான குழுவில் எம்பி ராகுல் காந்தி,மல்லிகார்ஜூனா கார்கே,கேசி வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளார். அதைப்போல,தேர்தல் செயற்பாட்டுக்கான குழுவில் ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால்,அஜய் மேகன்,பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள்.
யாத்திரை கை கொடுக்குமா?
இதனைத் தொடர்ந்து,காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை செல்லும் "பாரத் ஜோடா யாத்திரையின்" திட்டமிடலுக்கான குழுவில் எம்பி ஜோதிமணி,சசி தாகூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம்,2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டது காங்கிரஸ் கட்சி.
சிந்தனை அமர்வு கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவின்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களை தேர்வு செய்து அங்கு மக்கள் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த யாத்திரை மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் யாத்திரை காங்கிரஸ் வெற்றிக்கு கை கொடுக்குமா பார்க்கலாம்.