காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் தேவை.. உறுதி காட்டும் சோனியா காந்தி.. சீனியர்கள் ஏற்பார்களா?
டெல்லி: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை, காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனியர் தலைவர்களுடன் அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி விரைவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி இது தொடர்பாக இறுதி முடிவை எடுப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தவர் பிரசாந்த் கிஷோர். ஐ-பேக் என்ற நிறுவனத்தின் மூலமாக நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுத்து வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்காக அவர் பணியாற்றினார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக அவர் பணியாற்றினார்.

புகழ் பெற்ற வியூகங்கள்
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது நரேந்திர மோடியை பிரதமராக்க வியூகங்களை வகுத்தது இவரது நிறுவனம் என்பதால், நாடு முழுக்க மிகப் பெரும் புகழ் அடைய தொடங்கினார். கட்சி பாகுபாடு இல்லாமல் பல கட்சிகளுக்கும் பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர் . இருப்பினும் கடந்த உத்தரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தலின்போது இவர் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றிய போதிலும் அங்கு அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது. இவர் கூறியதை காங்கிரஸ் தலைவர்கள் பின்பற்றவில்லை என்று கருத்து மோதல்கள் உருவாகின.

நிதிஷ் குமார் கட்சி
இது ஒருபக்கம் என்றால், நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர் இதன் பிறகு தற்போது வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு அவர் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் தனித்தனியாக பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை நடத்தி இந்த யூகங்களுக்கு மேலும் தீனி போட்டார்.

காங்கிரஸ் சீனியர்கள் போர்க்கொடி
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தால் கூட சில முக்கியமான மூத்த தலைவர்கள் அவரை கட்சியில் சேர்க்க கூடாது என்று போர்க்கொடி உயர்த்துவதாக தெரிகிறது . காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் திடீரென்று பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு வருவதால் எந்த பலனும் கிடைத்து விடாது.. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நெருக்கமான உறவை வளர்ப்பது மட்டும்தான் காங்கிரஸ் வளர்ப்பதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்று அழுத்தம் திருத்தமாக கூறி வருவதாக தெரிகிறது.

சோனியா காந்தி அரசியல் ஆலோசகர்
பிரசாந்த் கிஷோர் ஒரு தேர்தல் வியூகம் நிபுணர் என்பதால் காங்கிரஸ் கலாச்சாரத்துக்கு ஒத்து போக மாட்டார் என்பது சிலரது கருத்தாக இருக்கிறது . காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், அகமது பட்டேல் இருந்த வரையில் அவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார் அவர் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்புவதற்கு சோனியாகாந்தி தகுதியான ஒரு நபரை தேடி வருகிறார் இந்த பதவிக்கு பிரசாந்த் கிஷோர் சரியாக இருப்பார் என்பது சோனியா காந்தி எண்ணமாக இருக்கிறது.

சோனியா காந்தி ஆலோசனை
பல மாநில சட்டசபை தேர்தல்களில் மற்றும் அடுத்தடுத்த லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் மோசமாக தோற்ற நிலையில் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க பிரசாந்த் கிஷோர் வருகை அவசியம் என்பது சோனியா காந்தியின் கருத்தாக இருக்கிறது. எனவே பிரசாந்த் கிஷோர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி விரைவில் ஆலோசனைகளை நடத்தி அவர்களை சமாதானம் செய்து இறுதி முடிவை எடுக்க இருக்கிறார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications