மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி.. அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தகவல்.. எவ்வளவு சம்பளம் உயரும்?
டெல்லி: நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு மத்திய அரசால் அறிவிக்கப்படும். 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. இதன்மூலம் 31%ல் இருந்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34%ஆக அதிகரித்தது.
மத்திய அரசின் தடைகளை தாண்டி.. OBC இடஒதுக்கீடு கிடைக்க திமுக காரணம்: எம்பி வில்சன் EXCLUSIVE பேட்டி
அகவிலைப்படி உயர்வு என்றால் என்ன?
அகவிலைப்படி உயர்வு என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் தொகையாகும். நாட்டில் உள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகின்றன.
எத்தனை சதவிகிதம் உயர்வு?
தற்போதைய சூழலில் மத்திய அரசு அகவிலைப்படியை 5% வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மத்திய 5% அகவிலைப்படி உயர்வு அளிப்பதை உறுதிசெய்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34% இருந்து 39 % உயரும். இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ27 ஆயிரத்திற்கு மேல் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏஐசிபிஐ குறியீடு
அகவிலைப்படி உயர்வு என்பது அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அளவைப் பொறுத்ததாகும். கடந்த மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீடு சரிவைக் கண்டது. ஜனவரி மாதம் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும் இருந்த ஏஐசிபிஐ புள்ளிகள், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் அதிகரித்தது. ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆக உள்ளது. எனவே மே மற்றும் ஜூன் மாதங்களில், இந்த புள்ளிகளின் தரவு 127ஐ கடந்தால் அகவிலைப்படி 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த மாத அறிவிப்பு
அரசு ஊழியர்களில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படுவதாக மத்திய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை அறிவித்தது. 1960ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி முதல் 1985ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை பணியில் இருந்து ஓய்வுபெற்ற சிபிஎஃப் பயனாளிகளுக்கான அகவிலை நிவாரணம் அடிப்படை நிவாரணத் தொகையான 368% இருந்து 381% உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.