தென்மேற்குப் பருவமழை டெல்லியில் லேட்டாக ஆரம்பித்தாலும் அடி தூள்... பல பகுதிகளை துவம்சம் செய்தது
டெல்லியில் தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும் நகரின் பல பகுதிகளை துவம்சம் செய்து வருகிறது.
டெல்லி: தென்மேற்குப் பருவமழை நாட்டின் தலைநகர் டெல்லியை முதன் முறையாக ஸ்பரிசித்துள்ளது. தாமதமாக பருவமழை தொடங்கினாலும் ஆரம்பமே அமர்களமாக வெளுத்து வாங்கி வருகிறது. டெல்லியின் பல பகுதிகளில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குர்கான், ஃபரிதாபாத் பகுதிகளில் பருவமழை கொட்டி வருகிறது.
நாட்டில் தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதமே தொடங்கினாலும் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் பருவமழை சீராக பெய்து வருகிறது. டெல்லியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்னி நட்சத்திர காலம் போல வெயில் சுட்டெரித்தது.
ஜூலை 1ஆம் தேதியன்று 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. ஜூலை மாதத்தில் கடந்த 90 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். பருவமழை தாமதமாகவே தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

கனமழை வெள்ளம்
வானிலை மையம் கணித்தது போலவே நடப்பாண்டு 16 நாட்கள் தாமதமாக பருவமழை தொடங்கியுள்ளது. டெல்லியிலும் புறநகர் பகுதிகளிலும் பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

மழை வெள்ளம்
டெல்லி, குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத், ஹரியானாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் காலை முதலே கனமழை கொட்டித்தீர்த்தது. தலைநகர் டெல்லியில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

15 நாட்கள் தாமதம்
கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பருவமழை தாமதமாகத் தொடங்கியுள்ளது. பருவமழை குறித்த கணிப்பில் தோல்வி ஏற்பட்டதால் இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இந்த நிலையில் பருவமழை நடப்பாண்டு தாமதமாகத் தொடங்கினாலும் முதல்நாளிலேயே கனமழையாக கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.

மழையை வரவேற்கும் மக்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தலைநகர் டெல்லியை முத்தமிட்ட பருவமழை பலரும் மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகின்றனர். சூடான டீயும் சுடச்சுட பக்கோடாவும் சாப்பிட்டு மழையை வரவேற்பதாக பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த நகரங்கள்
வட இந்திய மாநிலங்களில் பருவமழை விடாமல் நீடித்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் ஆற்றங்கரைகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications