டேட்டாக்களை மறைக்காதீர்கள்.. இலங்கை கெட்டது இதனால்தான்! மத்திய அரசின் கூட்டத்தில் ஓவைசி வலியுறுத்தல்
டெல்லி: இலங்கையின் உண்மை நிலையை கோத்தபய ராஜபக்சே மறைத்ததால் தான் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் வேலையிழப்பு, குழந்தை தொழிலாளர்களின் விபரங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவாரா? என இலங்கை நிலை குறித்து விவாதிக்க மத்திய அரசு கூட்டிய கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பினார். மேலும் நிதி நிலை தொடர்பாக மத்திய அரசை திமுகவுடன் சேர்ந்து அவர் எதிர்த்தார்.
இலங்கை பொருளாதார நெருக்கடி தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் திமுக உள்பட இந்தியாவின் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் பேசினார்.

மத்திய அமைச்சர் பேச்சு
அப்போது அவர் ‛‛அண்டை நாடான இலங்கை இதுவரை இல்லாத நெருக்கடியான சூழலை சந்தித்து வருகிறது. அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவுகிறது. சிலர் தவறான புரிதலில் இலங்கையை போன்ற நிலை இந்தியாவிலும் ஏற்படுமா என்று கேட்கிறார்கள். அப்படியொரு சூழல் வராது'' என கூறினார்.

ஓவைசி விமர்சனம்
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பேச்சு பற்றியும், கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். அதாவது இந்த கூட்டத்தில் மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த தகவல்கள் இடம்பெற்றதை கண்டித்துள்ளதோடு, இந்த விஷயத்தில் தேவையில்லாமல் மத்திய அரசு அரசியல் செய்கிறது என அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-இலங்கை பொருளாதார தொடர்பு
இலங்கை நெருக்கடி நிலை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. இதில் தேவையில்லாத விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா-இலங்கை குறித்து தவறான ஒப்பீடு இருப்பதாக கூறினார். பொருளாதார விஷயத்தில் இந்தியா-இலங்கை இடையே ஒரு தொடர்பு உள்ளது. இல்லாவிட்டால் ஏன் இந்தியாவின் பொருளாதாரம் குறித்த விபரங்களை அமைச்சகம் கூற வேண்டும்?. இதனை பல எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.

அமெரிக்கா-சீனாவின் பகுதியாக...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு 4.6 பில்லியன் டாலர் உதவி வேண்டும் என்றால் ஏன் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டை எடுக்க வேண்டும்?. இதில் முதலீடு செய்ய இந்தியாவிடம் போதுமான இருப்பு உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் இங்கு உள்ளனர். மேலும் அமெரிக்க-சீனா போட்டியின் ஒரு பகுதியாக இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அரசு பார்க்க வேண்டும். மாறாக இலங்கையை ஒரு கைப்பாவையாக மாற்ற அனுமதிக்கக் கூடாது.

இந்தியா மறக்க கூடாது
மேலும் இலங்கையில் உள்ள இனம் ரீதியிலான பதற்றத்தை இந்தியா புறக்கணிக்க கூடாது. முஸ்லிம்களும், தமிழர்களும் முந்தைய அரசு அல்லது தற்போதைய அரசில் அங்கம் வகிக்கவில்லை என்பதையும், இலங்கை அரசாங்கத்தின் இஸ்லாமிய வெறுப்புக் கொள்கைகள் மற்றும் ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளை மறந்துவிடக்கூடாது. இலங்கையில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுவது பொதுவானதாக உள்ளதையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என நான் கூறினேன்.

கோத்தபய ராஜபக்சேவுக்கு உதவியா?
மேலும் கோத்தபய ராஜபக்சே இந்தியா வர விரும்பிய நிலையில் அரசு மறுத்ததா? ஆம் எனில், ஏன்? என்றும், மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் அவர் விமானம் செல்ல வசதி செய்து கொடுக்கப்பட்டதா? என்பது பற்றியும் கூற வேண்டும் என்றேன். இலங்கையில் இருந்து அகதிகள் யாரும் வரவில்லை என்று அரசு கூறியுள்ளது. இனி வந்தால் என்ன செய்வது? அகதிகள் கொள்கை தேவை என்பதை அரசு ஏற்கவில்லையா? அல்லது நாம் எத்தனை பேருக்கு இடமளிக்க முடியும்? என கேள்வி எழுப்பினேன்.

பிரதமர் மோடி வெளியிடுவாரா?
இலங்கையின் வடக்கு மன்னார் மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது உண்மையா என்று கேட்டேன். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பீடு தவறான தகவல் என்று மத்திய அமைச்சர் கூறினார். கோத்தபய ராஜபக்சே உண்மை நிலவரங்களை மறைத்ததால் தான் இலங்கையில் நெருக்கடி நிலை ஏற்பட்டதாகவும், இந்தியாவில் வேலை இழப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய தரவுகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவாரா? எனவும் கேட்டேன்.

திமுகவுடன் சேர்ந்து எதிர்ப்பு
மேலும் மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த இந்த கூட்டத்தில் முன்வைத்த விளக்கத்திற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் திமுக கட்சிகள் கடும் ஆட்சேபனைகளை தெரிவித்தன. இந்த கட்சிகளுடன் சேர்ந்து நான் எனது எதிர்ப்பையும் பதிவு செய்தேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications