கொரோனா "ஹாட்ஸ்பாட்" கும்பமேளாவில் இருந்து சாதுக்கள் ரிட்டர்ன்- பெரும் அச்சத்தில் மாநிலங்கள்!
டெல்லி: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்திருக்கும் ஹரித்வார் கும்பமேளாவில் இருந்து திரும்பி வரும் சாதுக்கள், பொதுமக்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், ஒடிஷா, மத்தியபிரதேச மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. ஆனால் சாதுக்களை எப்படி ஒரே இடத்தில் தனிமைப்படுத்துவது என்பதுதான் இந்த மாநில அரசுகளுக்கு இப்போதுள்ள மிகப் பெரிய சவாலாகும்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும். இந்த கும்பமேளாவில் புனித நாட்கள் அல்லது முகூர்த்த நாட்களில் பெருந்திரளாக பக்தர்கள் க்லந்து கொண்டு கங்கை நதியில் புனித நீராடுவது வழக்கம்.
அத்துடன் இந்து மத சாதுக்களும் பல லட்சக்கணக்கானோர் புனித நீராடலில் கும்பமேளா நடைபெறும் இடங்களில் ஒன்று திரள்வது வழக்கம். இந்த சாதுக்களுக்கான அமைப்பான அகாடாக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புனித நாட்கள் ஒதுக்கப்படும். அன்றைய நாட்களில் நிர்வாண ஊர்வலம் சென்று கங்கை நதியில் இந்த சாதுக்கள் நீராடுவர். இந்த நிர்வாண சாதுக்கள் கடவுளின் மறு உருவம் என வட இந்தியர்கள் கருதுவதால் இவர்களை தரிசனம் செய்யவும் பல்லாயிரம் பேர் திரளுவர்.
ஹரித்வார் கும்பமேளா
தற்போது ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள் கும்பமேளாவில் ஒன்று திரண்டு புனித நீராடினர். ஆனால் இவர்கள் கொரோனா கால கட்டுப்பாடுகள் எதனையும் கடைபிடிக்கவில்லை. இதனால் ஹரித்வார் கும்பமேளா கொரோனா பரவல் மையமாக- ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்தது. இதுவரை கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் 5,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நிர்வாண சாதுக்கள் அகாடாவின் தலைமை சாது கபில்தேவ் தாஸ் கொரோனாவுக்கு பலியானார்.
சாதுக்களுடன் மோடி பேச்சு
இதனால் ஹரித்வார் கும்பமேளாவை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ஜூனா அகாடா தலைமை சாதுவான மகாமண்டலேஸ்வர் பூஜ்யா சுவாமி அவ்தேஷானந்த் கிரி ஜியை தொடர்பு கொண்டு பேசினார் அப்போது சாதுக்களின் உடல்நிலை குறித்து பிரதமர் கேட்டறிந்தார். அத்துடன் கும்பமேளாவில் பெருந்திரளாக சாதுக்கள் ஒன்றுகூடாமல் ஒரு அடையாள நிகழ்ச்சியாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று ஏப்ரல் 27- ந்தேதி நடைபெறும் புனித நீராடலில் 2 சாதுக்களின் அமைப்பான அகாடாக்கள் மட்டுமே பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் எச்சரிக்கை
ஆனால் பிரச்சனை இத்துடன் முடியவில்லை. கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு மாநிலங்களுக்கு திரும்பும் பக்தர்கள், சாதுக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்கள் கும்பமேளாவில் இருந்து யார் திரும்பிவந்தாலும் அவர்கள் பரிசோதனை செய்யப்படுவர்; 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என இந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. பொதுமக்களை பரிசோதனை செய்வது; தனிமைப்படுத்துவது என்பது மாநில அரசுகளுக்கு சிக்கலான ஒன்று அல்ல.
சாதுக்களால் சிக்கல்
அதேநேரத்தில் அகாடாக்கள் அல்லது காடுகளில் அலைந்து திரியும் சாதுக்களை எப்படி பரிசோதிப்பது; எப்படி தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதுதான் இந்த மாநிலங்களுக்கான சவால். மேலும் கும்பமேளாவில் பங்கேற்று திரும்பும் அகாடாக்களில் உறுப்பினர்களாக சாதுக்களைப் பொறுத்தவரையில் எந்த சட்ட திட்டங்களுக்கும் தங்களை உட்படுத்திக் கொண்டவர்களாகவும் இருப்பதில்லை. இதனால் சாதுக்கள் திரும்பும் மாநிலங்களில் கொரோனா மிக மோசமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.