மாணவர்கள், பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்றே நீட்,ஜேஇஇ தேர்வுகள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
டெல்லி: மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோள்களை ஏற்றுதான் நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் நீடிப்பதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்பது பொதுவான கோரிக்கை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக அல்லாத 7 மாநிலங்களின் முதல்வர்கள் வழக்கு தொடர உள்ளனர்.
நீட் ஜேஇஇ தேர்வுகள்...ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க... ராமதாஸ் கோரிக்கை!!
ரமேஷ் பொக்ரியால் அறிக்கை
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீட்,ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்துள்ள விளக்கம்:
மாணவர்கள் வேண்டுகோள்
மத்திய அரசைப் பொறுத்தவரையில் மாணவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் மிகவும் முக்கியமானது. நீட், ஜேஇஇ தேர்வுகள் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. உச்சநீதிமன்றமும் இந்த தேர்வுகளை நடத்தலாம் என முடிவு செய்திருக்கிறது. மாணவர்களும் பெற்றோர்களும் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த வேண்டும் என்று இ மெயில்கள் மூலம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
கல்வி ஆண்டு முக்கியம்
ஆகையால் மாணவர்களது ஒரு கல்வி ஆண்டை நாங்கள் பாழாக்க விரும்பவில்லை. இதனாலேயே நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாணவர்களில் 7.50 லட்சம் மாணவர்கள் அட்மிட் கார்டுகளை டவுன்லோடு செய்துள்ளனர்.
அட்மிட் கார்டு டவுன்லோடு
இதேபோல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 15 லட்சம் மாணவர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் அட்மிட் கார்டுகளை டவுன்லோடு செய்திருக்கின்றனர். தேர்வு மையங்களைப் பொறுத்தவரையில் மாணவர்கள் விரும்பிய மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வு மையங்கள்
மாணவர்கள் பலமுறை தேர்வு மையங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்திருந்தனர். இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு 99% மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. தேர்வு மையங்கள் மாற்றம் தொடர்பாக 400 கோரிக்கைகள்தான் நிலுவையில் உள்ளன. அத்துடன் தேசிய தேர்வு ஏஜென்சியானது உரிய வழிகாட்டுதல்களை ஏற்கனவே வெளியிட்டும் இருக்கிறது. மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.