ஆளுநர்கள் டம்மிதான்..ரப்பர் ஸ்டாம்ப் தான்.. செந்தில் பாலாஜி கேஸிலும் வெளுத்தெடுத்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் பதவி என்பது சம்பிரதாய நியமன பதவிதான்; ஆளுநர்களுக்கு மாநில அரசின் விவகாரங்களில் தலையிட எந்த ஒரு உரிமையுமே இல்லை என மீண்டும் இன்று செந்தில் பாலாஜி வழக்கிலும் உச்சநீதிமன்றம் அதிரடியாக குட்டு வைத்துள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிற ஆளுநர்களுக்கும் மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசுகளுக்கும் இடையேயான மோதல் காலங் காலமாக இருந்து வருகிறதுதான். இதனால் தான் பேரறிஞர் அண்ணா காலத்திலேயே 'ஆட்டுக்கு தாடி' என விமர்சிக்கப்பட்டது ஆளுநர் பதவி.

ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான மோதல் அத்திபூத்தது போல எப்போதாவது நடக்கும். தற்போது உச்சநீதின்றமே, இது புதுவகையான போக்காக இருக்கிறதே என அதிருப்தி தெரிவிக்கும் அளவுக்கு பூதாகரமாக வெடித்திருக்கிறது.
ஆளுநர்களுக்கு எதிராக தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பல வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கின்றன. இத்தனை வழக்குகளிலும் ஒருமுறையேனும் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்ததே இல்லை.
இதுவரையிலான வழக்குகளில் ஆளுநர்கள் யார்? ஆளுநரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் என்ன கருத்துகளை தெரிவித்திருக்கிறது தெரியுமா?
- மாநில சட்டசபை மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் பஞ்சாப் மாநில ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது "நெருப்புடன் விளையாடுவதை" போல என சாடியது உச்சநீதிமன்றம்.
- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மாநில சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம்
- சட்டசபையை கூட்டுவது, ஒத்திவைப்பது என்பது எல்லாம் சட்டசபை தலைவரான சபாநாயகரின் முடிவு. இதில் எல்லாம் ஆளுநர் தலையிட முடியாது.
- ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிற பெயரளவிலான ஒரு தலைவர் அவ்வளவுதான். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டுதான் ஆளுநர் செயல்பட்டாக வேண்டும்.
- தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் 2 ஆண்டுகளாக ஆளுநர் என்னதான் செய்து கொண்டிருந்தார்?
- மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதற்கு கூட உச்சநீதிமன்றத்தை நாடும் நிலைமையை ஆளுநர்கள் உருவாக்குவதா? ஆளுநர்கள் என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்பதை உணர வேண்டும்.
- மாநில அரசுகள் அனுப்பும் கோப்புகளை ஒரு ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட்டு வைக்க முடியும்?
- மசோதாக்களை நிறுத்தி வைப்பது, கோப்புகளை கிடப்பில் போடுவது ஆகியவற்றின் தீவிரத்தை ஆளுநர் உணர்கிறாரா? இப்படி நடப்பது கவலைக்குரியது.
- சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு சட்டசபைக்கு அனுப்புகிறார் ஆளுநர். அப்படி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பினால் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதை ஏன் ஜனாதிபதிக்கு ஏன் அனுப்ப வேண்டும்?
- மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் அதிகமானது. ஆனால் ஆளுநர் என்பவர் நியமனம் செய்யப்படுகிறவர்; அவருக்கு எல்லாம் அதிகாரம் கிடையாது.
- மாநில சட்டசபையின் மசோதாக்களை செயலிழக்க செய்யவோ முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு எந்த ஒரு அதிகாரம் இல்லை
இவ்வாறு பல்வேறு வழக்குகளில் சரமாரியாக குட்டு வைத்து வருகிறது உச்சநீதிமன்றம். இந்த வரிசையில்தான் இன்று சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, தமிழ்நாடு அமைச்சராக தொடருவதற்கு எதிரான மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம், ஒருவர் அமைச்சரவையில் இடம் பெறுவதை முடிவு செய்கிற அதிகாரம் மாநில முதல்வருக்குதான் இருக்கிறது. இதில் தலையிடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரமே இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என அழுத்ம் திருத்தமாக தெரிவித்துள்ளது.
இத்தனை குட்டு வாங்கியும் 'ஆட்டுக்கு தாடி' என சொல்லப்படுகிற ஆளுநர்கள் இனியேனும் 'அரசியல் சாசன' கடமையை மட்டும் செய்வார்களா? என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications