என்னுடைய சகோதரருக்கே போன் போட்டு என் உத்தரவு பற்றி கேள்வி எழுப்புவதா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம்
டெல்லி: மெடிக்கல் அட்மிஷன் தொடர்பான வழக்கில், நான் பிறப்பித்த உத்தரவு குறித்து எனது சகோதரரை அழைத்து பேசிய நபர் ஒருவர், நான் எப்படி அந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று கேட்டுள்ளார். அவருக்கு இத்தகைய துணிச்சல் எங்கிருந்து வந்தது? அந்த நபர் இந்தியாவுக்கு வெளியே ஓடி ஒளிந்து கொண்டாலும் அவரை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு தெரியும் என தலைமை நீதிபதி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், இன்று வழக்கு விசாரணையின் போது காட்டமான சில கருத்துகளை முன்வைத்தார். அதாவது, வழக்கு ஒன்றின் தீர்ப்பு தொடர்பாக தனது சகோதரரிடம் ஒருவர் பேசியதாகவும், அவருக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் கடுமையாக எச்சரித்தார்.

எங்கிருந்து துணிச்சல் வந்தது?
மெடிக்கல் அட்மிஷன் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இந்த தகவலை தலைமை நீதிபதி வெளியிட்டார். தலைமை நீதிபதி சூர்யகாந்த் இது தொடர்பாக கூறுகையில், "யாரோ ஒருவர் எனது சகோதரரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, நான் எப்படி அப்படிப்பட்ட ஒரு உத்தரவை கொடுத்தேன் என்று எனது சகோதரரிடம் கேட்டுள்ளார். அவருக்கு எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க கூடாது? என்றார்.
ஹரியானா அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறுகையில், "என் சகோதரருக்கு அழைத்து, தலைமை நீதிபதி எப்படி உத்தரவு வழங்கினார் என்று கேட்க அவருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? எனக்கு அவர் நிபந்தனை போடுகிறாரா? இதை நீங்கள் விசாரிக்க வேண்டும். மேலும், ஒரு வழக்கறிஞராக நீங்கள் திரும்ப பெற வேண்டும்" என்று மிகவும் காட்டமாக பேசினார்.
23 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்
மேலும் தனது சகோதரரை தொடர்பு கொண்டு பேசிய அந்த நபரை கடுமையாக எச்சரித்த தலைமை நீதிபதி, "அவர் இந்தியாவுக்கு வெளியே போய் ஒளிந்து கொண்டாலும், இத்தகைய நபர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு தெரியும். இதுபோன்ற முயற்சிகளில் இனி ஒருபோதும் ஈடுபட வேண்டாம். இதுபோன்ற நபர்களை நான் கடந்த 23 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்" என்று மிகவும் கோபத்துடன் எச்சரிக்கை விடுத்தார்.
மீரட்டில் உள்ள சுபார்த்தி மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்பில் சேர்வதற்காக, புத்த மத சிறுபான்மை ஒதுக்கீட்டின் கீழ் நலன்கள் வழங்க வேண்டும் என கோரிய மனுவை விசாரிக்கும் போது இந்த கருத்தை தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மீரட்டில் உள்ள அந்த கல்லூரி, தேசிய சிறுபான்மை கல்வி நிறுவன ஆணையம் அங்கீகரித்த புத்த மத சிறுபான்மை கல்வி நிறுவனமாகும்.
சிறுபான்மை நலன்களுக்கு தகுதியானவர்கள்
நிகில் குமார் புனியா மற்றும் ஏக்தா புனியா என்ற சகோதரர் - சகோதரி இருவரும், தாங்கள் புத்த மதத்திற்கு மாறியதால் சிறுபான்மை நலன்களுக்கு தகுதியானவர்கள் எனக் கூறி உச்சநீதிமன்றத்தை அணுகினர். அவர்கள் முன்பு பொது பிரிவு மாணவர்களாக தேர்வில் பங்கேற்றிருந்தாலும், மதமாற்றத்திற்குப் பிறகு இந்த நலன்களை பெற முடியும் என்று வாதிட்டனர்.
ஆனால், உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட அறிவிப்பின் காரணமாக, அவர்களின் மருத்துவக் கல்லூரி சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை தொடர்ந்தனர். எனினும், அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications