மாலேகான் குண்டுவெடிப்பு:மாஜி ராணுவ அதிகாரி வக்கீல் நீலா கோகலே நீதிபதியாக நியமனம்-கொலிஜியம் பரிந்துரை
டெல்லி: நாட்டை உலுக்கிய மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் ராணுவ அதிகாரி லெப்.கர்னல் பிரசாந்த் ஶ்ரீகாந்த் புரோகித்தின் வழக்கறிஞர் நீலா கோகலே, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் இந்த பரிந்துரையை வழங்கி உள்ளது.
2008ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. மாலேகான் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர். மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்துத்துவா தீவிரவாதிகளே மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணம் என தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்தவர் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே. இந்த வழக்கில் இந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தவரும் கர்கரேதான். இதனையடுத்து பெண் சாமியார் சாத்வி பிரக்யா, முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஹேமந்த் கார்கரே வீர மரணம் அடைந்தார்.

தற்போது சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், பாஜகவின் எம்பியாக உள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித், ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் கடந்த வாரம், தம்மை விடுதலை செய்யக் கோரி புரோகித் தாக்கல் செய்த மனு, மும்பை உயர்நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தது. புரோகித்துக்காக இந்த வழக்கில் வாதாடி வந்தவர் வழக்கறிஞர் நீலா கோகலே.
இதனிடையே நீலா கோகலேவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பரிந்துரை செய்துள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொலிஜியம் குழு பரிந்துரைக்கும். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என்பது நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications