பெண்கள் பாலியல் உணர்வை கட்டுப்படுத்துங்க..கொல்கத்தா ஹைகோர்ட் கருத்தை டிஸ்மிஸ் செய்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: இளம்பெண்கள் தங்களது பாலியல் தூண்டுதல் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
கொல்கத்தா உயர்நீதிமன்றமான கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி ஒரு வினோதமான தீர்ப்பை வழங்கியது. பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏஎஸ் ஓகா மற்றும் உஜ்ஜால் பயூன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரை காதலித்திருக்கிறார். ஆகையால் அந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்தும் அந்த இளைஞரை விடுதலை செய்கிறோம்.
நாட்டின் இளம் பெண்கள், 2 நிமிட இன்பத்துக்கு இடம் தந்துவிடக் கூடாது. இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சிகளைக் தூண்டுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் தம்முடைய கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம். இளம் பெண்கள் பாலியல் உணர்வுகள் தூண்டுதலுக்குள்ளாகி தோற்றுவிடக் கூடாது என அறிவுரை வழங்கி இருந்தனர். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுரைகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன.
கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் அத்தனை அறிவுரைகளையும் டிஸ்மிஸ் செய்தது. மேலும் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை விடுதலை செய்து அவரது 20 ஆண்டுகால தண்டனையை ரத்து செய்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்தது.












Click it and Unblock the Notifications