வெறுப்பு பேச்சு- தாமாகவே வழக்கு பதிவு செய்யனும்- மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் காட்டமான உத்தரவு
டெல்லி: வெறுப்பு பேச்சு விவகாரத்தில் புகார்கள் வராத போதும் மாநிலங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் கடுமையான அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாகல் இந்து சமாஜ் நடத்திய பேரணியில் இஸ்லாமியர் வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமண்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப், நாகரத்னா ஆகியோர் விசாரித்து மிக கடுமையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

வெறுப்பு பேச்சு வழக்கு விசாரணையின் போது கடந்த மாதம், அரசு திராணியற்றதாக இருப்பதால் வெறுப்பு பேச்சுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. இத்தகைய வெறுப்பு பேச்சுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரங்களை இழந்து நிற்கிறது அரசு.வெறுப்பு பிரசாரங்களைத் தடுக்க வேண்டும். இத்தகைய வெறுப்பு பிரசாரம் மிகவும் கொடியது. இவற்றைத் தடுக்க அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. நாட்டில் இதுவரையில் சகோதரத்துவம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக இந்த சகோதரத்துவ உணர்வில் விரிசல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தேசத்தின் குடிமக்களுக்கும் கூட சுயகட்டுப்பாடு என்பது அவசியமானது. இதர சமூக, மத மக்களைக் கொச்சைப்படுத்துதல் போக்கை கைவிடுதல் அவசியம் என கூறியிருந்தனர் நீதிபதிகள்.
மேலும் வெறுப்பு பேச்சு தொடர்பாக பொதுமக்களும் உறுதி மொழியேற்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்துகின்றனர். அதிகாரமிக்க அரசியல் சக்தியாக உருவெடுக்க இத்தகைய பிரசாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நேரு, வாஜ்பாய் என மிகச் சிறந்த பேச்சாளர்கள் இருந்தனர். கிராமங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் இவர்களது பேச்சை கேட்க மக்கள் திரண்டது ஒரு காலம். இப்போது எந்த ஒரு அறிவுமே இல்லாமல் பேசுகிறவர்கள் இருக்கின்றனர். அரசியலில் இருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும். அரசியலில் இருந்து மதத்தை பிரிப்பதன் மூலமே வெறுப்பு பேச்சுகளுக்கு முடிவு கட்ட முடியும். இத்தகைய வெறுப்பு பேச்சுகள் விவகாரங்களில் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போதும், 21-ம் நூற்றாண்டின் நாம் கடவுளின் தரத்தை வெகுவாகவே குறைத்துவிட்டோம். மதத்தின் பெயரிலான பெரும்பாலான நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன. மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் எனில் வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மீது நடவடிக்கை அவசியம் எடுக்கப்பட வேண்டும். எந்த மதத்தைச் சேர்ந்தவர் வெறுப்பு பேசினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக புகார்களே வராமல் இருந்தாலும் தாமாக முன்வந்து மாநில அரசுகள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கூறினர்.












Click it and Unblock the Notifications