உ.பி. உள்ளாட்சி தேர்தல்: இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல்- ஹைகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலை இடஒதுக்கீடு இல்லாமல் நடத்தலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 17 மாநகராட்சிகள், 200 பஞ்சாயத்து ஒன்றியம், 545 டவுன் பஞ்சாயத்துகளின் தலைவர் பதவிகளுக்கான ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் 4 மேயர், 54 நகராட்சி தலைவர், 147 டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டன.
உத்தரப்பிரதேச அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இடஒதுக்கீடு எதனையும் பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. உபாத்யாய் மற்றும் சவுரவ் லாவனியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உரிய ஏற்பாடுகளை உ.பி. அரசு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இதனை ஏற்க மறுத்தார். மேலும் இடஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல் படி ஒருநபர் ஆணையம் அமைத்து ஆய்வு நடத்துவோம் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், இடஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.